ராஜ்யசபாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதிபதி செளமித்ரா சென் ராஜினாமா
கொல்கத்தா: ராஜ்யசபாவில் பதவி நீக்கம் செய்யப்பட்ட கல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி செளமித்ரா சென், லோக்சபாவிலும் பதவி நீக்கம் செய்யப்படவிருந்த நிலையில் திடீரென தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கும், லோக்சபா சபாநாயகர் மீரா குமாருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
நிதி முறைகேடு, ஊழல் புகாருக்குள்ளான செளமித்ரா சென்னை சமீபத்தில் ராஜ்யசபா பதவி நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றியது. ராஜ்யசபாவுக்கு நேரில் வரவழைக்கப்பட்டு விளக்கம் கேட்கப்பட்டார் சென்.
இதையடுத்து லோக்சபாவில் அவர் மீதான பதவி நீக்க தீர்மானம் இன்று விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவிருந்தது. இந்த நிலையில் தனது பதவியை திடீரென ராஜினாமா செய்து விட்டார் சென். இதுதொடர்பான தனது ராஜினாமா கடிதத்தை அவர் குடியரசுத் தலைவருக்கும், லோக்சபா சபாநாயகருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதையடுத்து அவர் மீதான பதவி நீக்க தீர்மானம் தானாகவே செயலிழந்து விடும். இதுதொடர்பாக அட்டர்னி ஜெனரலுடன், லோக்சபா செயலகம் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கும்.
இதுகுறித்து சென்னின் வக்கீல் சுபாஷ் பட்டச்சார்யா கூறுகையில், சென் பயந்து போய் ராஜினாமா செய்யவில்லை. பயந்திருந்தால் ராஜ்யசபா விவாதத்திற்கு முன்பே அவர் ராஜினாமா செய்திருப்பார். மேலும் சென் ராஜினாமா செய்தாலும் கூட சென்னை லோக்சபாவில் பதவி நீக்க முடியும். எனவே அதற்கும், ராஜினாமா முடிவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.