நாங்கள் 'பிஸியாக' இருப்பதால் இடைத் தேர்தலில் போட்டியில்லை- ராமதாஸ்

இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்தில் தற்போது திமுகவினர் மீது காவல்துறை நில அபகரிப்பு வழக்குகளைப் போட்டு வருகிறது. ஏதோ கிரிமினல்களைப் பிடிப்பது போல விடாப்பிடியாக கைது செய்து சிறையில் அடைத்து வருகின்றனர். ஜாமீன் வழங்கவும் காவல்துறை கடுமையாக எதிர்க்கிறது.
காவல்துறையின் இந்த நடவடிக்கை அரசின் பழிவாங்கும் செயலாகவே தெரிகிறது. கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கோரினால் அதற்கு காவல்துறை மறுக்கக் கூடாது.
திருச்சியில் போட்டியிட மாட்டோம்:
நாங்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதில் 'பிஸியாக' உள்ளதால், திருச்சி மேற்கு இடைத் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஒரு வேளை அங்கு விடுதலைச் சிறுத்தைகள் தனியாகப் போட்டியிட்டு, எங்களது ஆதரவைக் கோரினால், ஆதரவைத் தருவோம்.
உள்ளாட்சித் தேர்தலில் திமுக, அதிமுக என யாருடனும் கூட்டணி வைக்க மாட்டோம். அதேசமயம், விடுதலைச் சிறுத்தைகள் போன்ற கட்சிகளுடன் கூட்டணி வைக்கும் வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும். 2 கட்டமாக நடத்தினால் பல்வேறு முறைகேடுகள் நடக்க வாய்ப்புள்ளது. மேலும் உள்ளாட்சித் தேர்தலில் வாக்குச் சீட்டு முறையைத் தான் பின்பற்ற வேண்டும். இந்தத் தேர்தலுக்கு வாக்குப் பதிவு எந்திரம் தேவையில்லை.
பொது நுழைவுத் தேர்வு-இட ஒதுக்கீடு விஷயத்தில் மத்திய மனிதவளத்துறை அமைச்சர் கபில் சிபலின் போக்கு சரியில்லை. அவர் சமூக நீதிக்கு எதிராக நடந்து வருகிறார். முன்னாள் பிரதமர் வி.பி.சிங் ஆட்சியில் தான் மத்திய-மாநில அரசு வேலைவாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.
ஆனால், வெறும் 5.5 சதவீத வேலைவாய்ப்புகள் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் உண்மையான நிலையை விளக்க, மத்திய அரசு வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றார் ராமதாஸ்.
மதிமுகவுடன் கூட்டணி கிடையாது?:
மதிமுகவுடன் பாமக கூட்டணி வைக்குமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, திராவிடக் கட்சிகள் எதனுடனும் பாமக கூட்டணி வைக்காது என்று பதிலளித்தார் டாக்டர் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications