வீரபாண்டி ஆறுமுகம், ரங்கநாதனை சொன்ன சிறையில் அடைக்காதது ஏன்?- அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
சென்னை: முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதன் ஆகியோரை சொன்ன சிறையில் அடைக்காமல் வேறு சிறையில் அடைத்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்தில் நகைக் கடை நிலத்தை அபகரித்ததாக வீரபாண்டி ஆறுமுகத்தை கோவை சிறையிலிருந்து வெளியே வந்ததும் கைது செய்தனர் போலீஸார். பின்னர் அவரை சேலம் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். அவரை சேலம் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஆனால் அப்படிச் செய்யாமல், திருச்சிக்கு அனுப்பினர்.
இதேபோல சில வாரங்களுக்கு முன்பு கைதான ரங்கநாதனை கோர்ட் உத்தரவுப்படி சென்னை புழல் சிறையில் அடைக்காமல், வேலூர் சிறைக்கு அனுப்பினர்.
இதையடுத்து வீரபாண்டியாரின் மகன் ராஜா மற்றும் ரங்கநாதனின் மனைவி நளினி ஆகியோர் ஆட் கொணர்வு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா தாக்கல் செய்த மனுவில்,
பிரேம்நாத் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தொடரப்பட்ட கொலை மிரட்டல் வழக்கில், என் தந்தை வீரபாண்டி ஆறுமுகம் சேலம் மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு, அவரை 4-வது குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது வீரபாண்டி ஆறுமுகத்தை சேலம் மத்திய சிறையில் அடைக்க வேண்டும் என்று மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். ஆனால் அவரை திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்துவிட்டனர்.
இந்த வழக்கில் பிரேம்நாத் கூறியுள்ள குற்றச்சாட்டுக்கும், என் தந்தைக்கும் சம்பந்தமே கிடையாது. ஏற்கனவே சில வழக்கில் அவரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜாமீன் பெற்று வந்த அவரை மீண்டும் கைது செய்து சிறையில் மீண்டும் அடைத்துள்ளனர். எனது தந்தைக்கு உடல் நலம் சரியில்லை. ஆனாலும் சேலம் சிறையில் அடைக்காமல், மாஜிஸ்திரேட்டின் உத்தரவை மீறி திருச்சி சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த செயல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிரானது. எனவே திருச்சி மத்திய சிறையில் இருந்து சேலம் மத்தியசிறைக்கு என் தந்தையை மாற்ற உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேபோல நளினி ரங்கநாதன் தாக்கல் செய்திருந்த மனுவில்,
நொளம்பூர் போலீசில் உள்ள நில அபகரிப்பு வழக்கில் ரங்கநாதன் கைது செய்யப்பட்டார். பின்னர் என் கணவரை புழல் சிறையில் அடைக்காமல், வேலூர் மத்திய சிறையில் போலீசார் அடைத்துள்ளனர். என் கணவரை கொடுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக போலீசார் இப்படி செயல்படுகின்றனர். எனவே என் கணவரை புழல் சிறைக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை நீதிபதிகள் முருகேசன், சசிதரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், மாஜிஸ்திரேட் உத்தரவை மீறி வேறு சிறைகளில் அடைத்தது உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. எனவே இந்த மனுக்கள் குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் கூறி நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications