அமிதாப் பச்சன், முலாயம் சிங் யாதவ் நன்றி கெட்டவர்கள்: ஜெயப்பிரதா சாடல்

ஓட்டுப் போட எம்.பி.களுக்கு லஞ்சம் கொடுத்த வழ்ககில் கைதாகி முன்னாள் சமாஜ்வாடி உறுப்பினர் அமர் சிங் திஹார் சிறையில் உள்ளார். அவருக்கு இதுவரை ஜாமீன் கிடைக்கவில்லை.
இந்நிலையில் அமர்சிங்கின் தீவிர ஆதரவாளரான ஜெயப்பிரதா கூறுகையில், "அமர் சிங் மட்டும் வாயைத் திறந்தால் பெரும் புள்ளிகள் எல்லாம் சிக்குவார்கள். ஆனால் அவர் பொறுமையாகவும், அமைதியாகவும் இருக்கிறார். அது தான் அவர் குணம்.
அமிதாப் பச்சனுக்கு கஷ்டக்காலத்தில் உதவி செய்தவர் அமர் சிங். ஆனால் தற்போது அமர் சிங் பிரச்சனையில் இருக்கும்போது அமிதாப் கண்டுகொள்ளவேயில்லை.
முலாயம் சிங் யாதவை உத்திர பிரதேச முதல்வராக்கியது அமர் சிங் தான். முலாயமும் சரி, காங்கிரஸும் சரி அமர் சிங்கிற்கு உதவ முன் வரவில்லை. நடிகர் ராஜ்பாபரும் நன்றி கெட்டவர் தான்.
இந்த வழக்கிற்கும் அமர் சிங்கிற்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அவர் ஒரு அப்பாவி. வேண்டும் என்றே அவரைக் குறிவைக்கிறார்கள். அவர் கொடுத்ததாகக் கூறப்படும் பணம் எங்கிருந்து வந்தது? டெல்லி போலீஸிடம் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை. அவர் இமேஜைக் கெடுக்க வேண்டும் என்ற அரசியல் காழ்ப்புணர்ச்சியில் தான் இப்படி செய்திருக்கிறார்கள்.
சிறையில் இருக்கும் கழிவறை சுகாதாரமான முறையில் இல்லை. இதனால் அவர் சிரமப்படுகிறார். அவருக்கு உடல் நலக் குறைவு இருப்பதால் அவர் சிறையில் இருப்பது சரியல்ல.
எனக்கு நீதித் துறையின் மீது நம்பிக்கை உள்ளது. ஓட்டுக்கு பணம் கொடுத்து அவர் ஒன்றும் லாபம் அடையவில்லையே. பின் அமர் சிங் ஏன் சிறையில் இருக்கிறார் என்று சாமானிய மக்கள் கேட்கின்றனர்" என்றார்.












Click it and Unblock the Notifications