சென்னை விமான நிலையத்தில் நெப்போலியனின் கார் டிரைவர்- போலீஸ்காரர் அடிதடி!
சென்னை: சென்னை விமான நிலையத்தில் இன்று மத்திய அமைச்சர் நெப்போலியனின் கார் டிரைவரும் போலீஸ்காரர் ஒருவரும் அடிதடியில் இறங்கியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மத்திய இணையமைச்சர் நெப்போலியன் இன்று காலை கொச்சி செல்வதற்காக சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வந்தார். விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் கார்களை நிறுத்தும் விவிஐபி பகுதியில் அவரது கார் நிறுத்தப்பட்டது.
நெப்போலியன் இறங்கி ஓய்வு அறையை நோக்கிச் சென்றுள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழக ஆயுதப்படை காவல் பிரிவைச் சேர்ந்த ஆலன் பிரின்ஸ் என்ற போலீஸ்காரர், இது விவிஐபிக்கள் காரை நிறுத்துமிடம். இங்கு காரை நிறுத்தக்கூடாது என்று கூறியுள்ளார்.
அதற்கு நெப்போலியனின் கார் டிரைவர் யுவராஜ், இது மத்திய அமைச்சரின் கார். எனவேதான் இங்கு நிறுத்தி இருக்கிறேன் என்று பதில் தந்துள்ளார். ஆனாலும், அதை காதில் வாங்காத ஆலன் பிரின்ஸ் டிரைவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி அடித்துக் கொண்டனர்.
இதற்கிடையே சம்பவம் பற்றி தகவல் அறிந்து நெப்போலியன் அங்கு விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டிருந்த இருவரையும் பிரித்துவிட்டு, விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து அறிந்து விமான நிலைய உயர் அதிகாரிகளும் அங்கு விரைந்து வந்து இருவரையும் சமரசம் செய்து அனுப்பி வைத்தனர்.
பின்னர் மத்திய அமைச்சர் நெப்போலியன் விமானத்தில் கொச்சி புறப்பட்டுச் சென்றார்.
இந்த சம்பவம் குறித்த விவரங்களை உள்துறை அமைச்சகத்துக்கு விமான நிலைய அதிகாரிகள் அனுப்பி வைத்துள்ளனர். இந்த விவகாரத்தில் காவலர் மீதே தவறு இருப்பதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications