முதல்வன் ஸ்டைலில் பேட்டி: விருட்டென்று வெளியேறிய கேரள முதல்வர் உம்மன் சாண்டி
திருவனந்தபுரம்: கேரள முதல்வர் உம்மன்சாண்டி ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கேட்ட கேள்விகளால் கடுப்பாகி பாதியிலேயே வெளியேறிவிட்டார். இதனால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள முதல்வர் உம்மன் சாண்டி மலையாள சேனல் ஒன்றில 45 நிமிட நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அம்மாநில மக்கள் முதல்வரின் நிகழ்ச்சியை ஆர்வமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். முதல்வரை வேணு என்பவர் பேட்டி கண்டார். பேட்டி ஆரம்பித்ததில் இருந்தே வேணு உம்மன் சாண்டியை கேள்வி மேல் கேள்வி கேட்டார்.
பாலக்காடு பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையத்துக்கா நிலம் ஒதுக்கீட்டில், ஆதிவாசிகளின் நிலம் கையகப்படுத்தப்பட்டது குறித்து பல கேள்விகள் கேட்டார். இந்த விவகாரம் தவிர அச்சுதானந்தன் ஆட்சியில் நிகழ்ந்த காசரக்கோடு துப்பாக்கிச் சூடு முறைகேட்டினை விசாரிக்கும் நீதி விசாரணைக் குழு மாற்றப்பட்டது குறித்தும் கேள்விக் கணைகள் தொடுத்தார்.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த உம்மன் சாண்டி கடுப்பாகி நிகழ்ச்சி ஆரம்பித்த 20-வது நிமிடத்திலேயே வெளியேறிவிட்டார். உம்மன் சாண்டி முதல்வராகப் பொறுப்பேற்று 100 நாட்கள் முடிந்ததையொட்டி தான் இந்த பேட்டியே எடுக்கப்பட்டது.
முதல்வர் பாதியிலேயே வெளியேறியதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். அவர் ஆத்திரப்படுபவர் அல்ல என்று முதல்வர் அலுவலக ஊழியர்கள் தெரிவித்தனர். உம்மன் சாண்டியை ஏதோ குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக் கேள்வி கேட்பது போல பேட்டி எடுக்கப்பட்டது என்று ஒரு அதிகாரி தெரிவித்தார்.
இதனால் ஏற்படும் விளைவுகளை கருத்தில் கொண்டும், மேலும் மோசமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுக்கவும் தான் அவர் நிகழ்ச்சியின் பாதியிலேயே வெளியேறியிருப்பார் என்று மற்ற ஊழியர்கள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications