15 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனித்துத் தேர்தல் களத்தில் இறங்கும் பாமக!
சென்னை: கட்சி பாமகவை தொடங்கி தேர்தல் அரசியலில் ஈடுபட ஆரம்பித்து 7 வருடங்கள் தனியாகவே போட்டியிட்டு வந்து பின்னர் 1996க்குப் பின்னர் திராவிடக் கட்சிகளுடன் சரமாரியாக மாறி மாறி கூட்டணி வைத்து வந்த பாமக, 15 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது மீண்டும் தனியாக தேர்தல் களத்தை சந்திக்கவுள்ளது.
1989ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக போட்டியிட்டது பாமக. அத்தேர்தலில் வட மாவட்டங்களைச் சேர்ந்த 10 தொகுதிகளில் போட்டியிட்டு பத்திலும் தோல்வியடைந்தது.
அதன் பின்னர் 1996ல் நடந்த லோக்சபா தேர்தல் வரை அது தனியாகவே பயணம் மேற்கொண்டது. இந்த நிலையில்தான் 1998ம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலில் முதல் முறையாக அது கூட்டணி அரசியலுக்குத் தாவியது. அத்தேர்தலில அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தது பாமக.
அன்று முதல் ஆரம்பித்தது பாமகவின் 'சீசா' அரசியல் பயணம். 1999ல் நடந்த லோக்சபா தேர்தலில் திமுகவுக்கு அணி மாறிய பாமக, 2001ல் சட்டசபைத் தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்தது. 2004ல் மீண்டும் திமுகவுக்குத் திரும்பிய அக்கட்சி, 2006ல் நடந்த சட்டசபைத் தேர்தலிலும் திமுகவுடனேயே நீடித்தது.
2009 தேர்தலில் மீண்டும் அதிமுகவுடன் கை கோர்த்தது பாமக. இந்தக் கூட்டணிக்காக அக்கட்சி பொதுக்குழுக் கூட்டத்தில் ஓட்டெடுப்பு நடத்தி அதிமுகவைத் தேர்ந்தெடுத்தார் டாக்டர் ராமதாஸ். தமிழக அரசியல் வரலாற்றில், யாருடன் கூட்டணி வைப்பது என்பதை ஓட்டெடுப்பு நடத்தி முடிவு செய்த ஒரே கட்சி, முதல் கட்சி பாமகதான் என்பது குறிப்பிடத்தக்கது.
கூட்டணி அரசியலுக்கு் தாவிய பின்னர் தொடர்ந்து வெற்றி பெற்று வந்த பாமகவுக்கு 2009 லோக்சபா தேர்தல் பெரும் அடியைக் கொடுத்தது. போட்டியிட்ட அத்தனை இடங்களிலும் அக்கட்சி படு தோல்வியைச் சந்தித்தது.
இந்த நிலையில் 2011 தேர்தலில் மீண்டும் திமுகவுடன் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டது பாமக. இந்தத் தேர்தலிலும் அக்கட்சிக்கு மரண அடி கிடைத்தது. இதன் மூலம் பாமக இடம் பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணி என்ற பெயரும் அடிபட்டுப் போனது.
இந்த சூழ்நிலையில்தான் விரைவில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் தனியாக போட்டியிடப் போவதாக கூறியுள்ளார் டாக்டர் ராமதாஸ். இதன் மூலம் 15 ஆண்டுகளுக்குப் பின்னர் திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல் முதல் முறையாக தனியாக தேர்தல் களம் காணவுள்ளது பாமக. அக்கட்சியுடன் விடுதலைச் சிறுத்தைகள் மட்டும் சேரக் கூடிய வாய்ப்புகள் இப்போதைக்கு உள்ளன.
இனிமேல் கூட்டணி கிடையாது என்று ராமதாஸ் கூறினாலும் கூட, உள்ளாட்சித் தேர்தலில் தனது பலத்தைக் காட்டுவதன் மூலம் அடுத்து வரும் லோக்சபா தேர்தலில் மீண்டும் கூட்டணிக்கு பேரம் பேச பாமக திட்டமிட்டுள்ளதாகவே அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.












Click it and Unblock the Notifications