என்ஜினியர் திருமணத்தை தடுத்து நிறுத்தி அவரையே கரம் பிடித்த காதலி

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள வலசை கிராமத்தைச் சேர்ந்த பிச்சையா மகன் மணிகண்டன். பி.டெக். பட்டதாரியான இவர் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரும், ஸ்ரீபெரும்புதூரைச் சேர்ந்த சகாயராஜ் மகள் சுசனாமேரி என்பவரும் கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் தீவிரமாக காதலித்து வந்தனர். சுசனாமேரி அங்குள்ள செல்போன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
இவர்களது காதலை அறிந்த மணிகண்டனின் பெற்றோர் அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்திற்கு முன் சென்னையைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், மணிகண்டனுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. இவர்களின் திருமணம் கடையநல்லூரில் உள்ள ஒரு மண்டபத்தில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதை தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு மணமக்கள் குடும்பத்தினர் திருமண மண்டபத்துக்கு வந்தனர். திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் தட புடலாக நடந்தது. நேற்று காலை உறவினர்கள் அனைவரும் திருமண மண்டபத்தில் கூடியிருந்தனர்.
இதற்கிடையே காதலனுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்த சுசனாமேரி தனது பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் இன்று காலை கடையநல்லூர் வந்தார். பின்னர் அவர் அங்குள்ள காவல் நிலையத்துக்கு சென்று தனது காதலனுக்கு நடைபெற உள்ள திருமணத்தை நிறுத்தும்படியும், அவரையே தனக்கு திருமணம் செய்து வைக்கும்படியும் அதற்கான ஆதாரங்களையும் போலீசாரிடம் காண்பித்து கதறி அழுதார். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ஜெயராமன் மற்றும் போலீசார் மண்டபத்துக்கு சென்று மணமகன் மற்றும் மணமகளின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சுசனாமேரியின் காதலை மணிகண்டன் ஒப்புக் கொண்டார். மேலும் அவரையே திருமணம் செய்வதாகவும் கூறினார்.
அதே நேரத்தில் மணமகள் வீட்டினரும் இந்த திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர். இதை தொடர்ந்து அதே மேடையில் சுசனாமேரிக்கும், மணிகண்டனுக்கும் திருமணம் நடந்தது. இந்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications