கூடன்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 100 பேர் சாகும்வரை உண்ணாவிரதம்: வைகோ பங்கேற்பு

கூடன்குளத்தில் ரஷ்ய நாட்டு உதவியுடன் ரூ. 13 ஆயிரத்து 500 கோடி மதிப்பீட்டில் தலா ஆயிரம் மெகாவாட் மின்உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணுஉலைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் அணுஉலையின் கட்டுமான பணி முடிவடைந்து மின் உற்பத்திக்காக பல்வேறு கட்ட சோதனைகள் நடந்து வருகிறது. சோதனை முடியும் தருவாயில் இந்த ஆண்டு இறுதிக்குள் முதல் அணுஉலையில் இருந்து மின் உற்பத்தி தொடங்கப்பட இருக்கிறது.
இந்த அணுமின் நிலையம் தமிழக மக்களின் உயிருக்கு உலை வைக்கும், மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் என மக்கள் கருதுகின்றனர். இதனால் கூடன்குளம் அணுமின் நிலையத்தை உடனடியாக மூட வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தியும், ஜப்பான் சம்பவம் போன்றதொரு அவலநிலை தமிழகத்திற்கு வரக்கூடாது என்பதற்காகவும், ஜனநாயக ரீதியில் போராடும் பொதுமக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ்பெற வலியுறுத்தியும் இடிந்தகரையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர் ஏற்பாடு செய்தனர்.
தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு போலீசார் முறையான அனுமதி வழங்கவில்லை. இருந்தபோதிலும் அணுமின் நிலைய எதிர்ப்பாளர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கான ஏற்பாடுகளை செய்தனர். அதன்படி நேற்று காலை 9 மணியளவில் இடிந்தகரை புனித லூர்து அன்னை ஆலயம் முன் கூடத் துவங்கினர்.
அங்கு அனுமதியின்றி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் இருக்க அணுசக்தி எதிரான மக்கள் இயக்கத்தினர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் உரிமை பாதுகாப்பு இயக்கத்தினர், தமிழர் களம் அமைப்பினர், புற்றுநோய்க்கு எதிரான மக்கள் இயக்கத்தினர், தமிழ்நாடு கடலோர மக்கள் கூட்டமைப்பினர் மற்றும் தூத்துக்குடி மறைமாவட்ட கிறிஸ்தவ வாழ்வுரிமை மக்கள் இயக்கத்தினர் உட்பட பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என சுமார் 3 ஆயிரம் பெண்கள் உட்பட 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கூடன்குளம் அணுமின் நிலையத்தினை மூடும் வரை தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்து மக்கள் பந்தலில் அமர்ந்தனர்.
நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்ட கடலோர மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என்றும், பள்ளிகளுக்கு தங்களின் குழந்தைகளை அனுப்புவதில்லை என்றும் முடிவு செய்தனர். மேலும் இடிந்தகரை தொடர் உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கூடன்குளத்தில் முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னிட்டு இடிந்தகரை மற்றும் கூடன்குளம் பகுதியில் உள்ள தெருக்களில் கறுப்பு கொடியேற்றப்பட்டு அணுமின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. போலீசார் அனுமதியின்றி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டதால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் ஒதுங்கியே இருந்தனர். இடிந்தகரைக்கு வெளியேயும் நின்று கொண்டிருந்தனர். இதனால் இடிந்தகரை பகுதியில் பதட்டம் ஏற்பட்டது.
இன்றும் இரண்டாவது நாளாக மக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்ட கடற்கரை நகரமான இடிந்தகரையில் நடக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரில் 100 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் அறிவித்துள்ளதால் பதட்டம் நிலவுகிறது. மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இடிந்தகரை வந்து பொதுமக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்.












Click it and Unblock the Notifications