கூடுதல் டிஜிபி ஜார்ஜ் மதுரையில் முகாமிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
பரமக்குடி: தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை முன்னிட்டு பரமக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை அடுத்து அந்த பகுதிக்கு தமிழக கூடுதல் டி.ஜி.பி. ஜார்ஜ் விரைந்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு தினமான செப்டம்பர் 11 ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் பல்லாயிரக்கணக்கான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக கிளம்பிய தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியனை போலீசார் வழிமறித்துக் கைது செய்ததைத் தொடர்ந்து பரமக்குடியில் வன்முறைவெடித்தது.
கலவரத்தை தடுக்க பரமக்குடியில் போலீசார் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியானார்கள். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், சென்னையில் டி.ஜி.பி. கே.ராமானுஜம் தலைமையில் உயர் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை, ராமநாதபுரம் மாவட்டங்களில் நிலவும் கலவர சூழல் குறித்தும், சட்டம் - ஒழுங்குப் பிரச்னை குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், கலவரத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது, கலவரத்தைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுப்பதும் முடிவு செய்ததாக கூறப்படுகின்றது.
இதனையடுத்து, கூடுதல் ஏ.டி.ஜி.பி. சார்ஜ் மதுரைக்கு விரைந்தார். அங்கு பதற்றம் தணிந்து , சகஜநிலை ஏற்படும் வரை தங்கியிருந்து தேவையான நடவக்கைகளை மேற்கொள்வார் என காவல் துறை வாட்டாரங்கள் கூறப்படுகின்றது.