வெளிநாட்டவர்களைக் கவர 10,000 இலவச விமான டிக்கெட் வழங்கும் ஜப்பான்
ஜப்பான் நாடு பல அழகிய தீவுகளையும், இயற்கை எழில் சூழ்ந்த பல தலங்களையும் கொண்ட நாடு. ஜப்பானுக்கு வருவாய் ஈட்டித் தரும் துறைகளில் சுற்றுலாவும் ஒன்று.
ஆனால் சமீபத்தில் நடந்த சுனாமித் தாக்குதல், புகுஷிமா அணு உலை வெடிப்பு உள்ளிட்டவற்றால் ஜப்பான் மீது உலக மக்களுக்குப் பீதியாகி விட்டது. இதனால் கடந்தாண்டை விட இந்தாண்டு 32 சதவீத சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதையடுத்து ஜப்பான் அரசு, புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. அடுத்தாண்டு ஜப்பான் வரும் சுற்றுலா பயணிகளில் 10,000 பேருக்கு இலவச விமான டிக்கெட்களை வழங்க உள்ளது.
இத்திட்டம் குறித்த மசோதா அந்நாட்டு அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில், இதற்கான விண்ணப்பங்கள் விரைவில் ஆன்-லைனில் வெளியிடப்படும்.
இத்திட்டத்தின்படி, சுற்றுலா பயணிகளின் விமான கட்டணம் மட்டுமே இலவசமாக வழங்கப்படும். மற்றபடி ஊருக்கு வந்த பின்னர், உணவு, தங்குவசதி உள்ளிட்ட மற்ற செலவுகளை சுற்றுலாப் பயணிகள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும்.
இந்த திட்டத்திற்கு அடுத்த மார்ச் மாதம் நடக்கும் பட்ஜெட்டில் அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.