உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் ஜெயலலிதா 3 நாள் தீவிரப் பிரசாரம்
திருச்சி இடைத் தேர்தல் பிரசாரத்தில்தான் இத்தனை நாட்களாக திமுகவும், அதிமுகவும் தீவிர கவனம் செலுத்தி வந்தன. தற்போது அங்கு பிரசாரம் ஓய்ந்து விட்டது. நாளை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தற்போது திமுக, அதிமுகவின் கவனம் உள்ளாட்சித் தேர்தல் பக்கம் திரும்பியுள்ளது.
முதல்வர் ஜெயலலிதா 3 நாள் தீவிரப் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார். இதுகுறித்து அதிமுக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
17-10-2011 அன்று நடைபெற உள்ள சென்னை, வேலூர், சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய மாநகராட்சிகளில் மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர் பதவிகளுக்கு நடைபெற உள்ள தேர்தலை முன்னிட்டு, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமையில் இருந்து 15-ந் தேதி சனிக்கிழமை வரை, சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து கீழ்க்கண்டவாறு தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.
பிரசார விவரம்:
தூத்துக்குடி
13-10-2011 (வியாழக்கிழமை)- தூத்துக்குடி, திருநெல்வேலி, மதுரை.
கோவை
14-10-2011 (வெள்ளிக்கிழமை)- சேலம், ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர்.
சென்னை, வேலூர்
15-10-2011 (சனிக்கிழமை)- வேலூர், சென்னை.
நாளை காலை 10.30 மணிக்கு சென்னையிலிருந்து விமானம் மூலம் முதல்வர் ஜெயலலிதா தூத்துக்குடி செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலமாக நெல்லை செல்லும் முதல்வர், வாகையடி முனையில் பிரசாரம் செய்கிறார். பிறகு ஹெலிகாபடர் மூலம் தூத்துக்குடி செல்லும் ஜெயலலிதா, கார் மூலம் பயணித்து அண்ணாநகரை அடைந்து அங்கு பிரசாரம் செய்கிறார்.
பிறகு மறுபடியும் ஹெலிகாப்டரில் ஏறும் அவர் நேராக மதுரை செல்கிரார். மதுரையில் மாநகராட்சித் தேர்தலில் போட்டியிடும் மேயர், கவுன்சிலர் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு வேட்டையாடுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருணாநிதி, ஸ்டாலின்
இதேபோல திமுக தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோரும் உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தை முடுக்கி விட்டுள்ளனர்
ஒரே தலைவர் விஜயகாந்த்
தமிழக அரசியல் தலைவர்களிலேயே உள்ளாட்சித் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஒரே தலைவர் விஜயகாந்த்தான். அவர்தான் முதல் ஆளாக தமிழகம் முழுவதும் சுற்றி வந்து தொண்டை வலிக்க வலிக்கப் பேசிப் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.