தமிழக உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக்கு 80,000 போலீஸார்-டிஜிபி தகவல்
சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தல் பாதுகாப்புக்கு 80 ஆயிரம் போலீஸார் ஈடுபடுத்தப்படவுள்ளதாக டிஜிபி ராமானுஜம் தெரிவித்துள்ளார்.
இன்று அவர் தேர்தல் பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மாநிலத் தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு தேர்தல் ஆணையர் சோ. அய்யர் தலைமை தாங்கினார். அதில், மாநில தேர்தல் செயலாளர் சேவியர் கிறிஸ்சோ நாயகம், சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதி, சென்னை மாநகராட்சி கமிஷனர் கார்த்திகேயன், கூடுதல் டி.ஜி.பி. (அமலாக்கம்) காந்திராஜன், தேர்தல் ஐ.ஜி. அலெக்சாண்டர் மோகன், வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேந்திரபாபு, தேர்தல் சூப்பிரண்டு மோகன், கூடுதல் துணை கமிஷனர் விமலா ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை நகரில் பாதுகாப்பு ஏற்பாடுகள், தமிழக அளவிலான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளிட்டவை குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னர் டிஜிபி ராமானுஜம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழ்நாட்டில் உள்ளாட்சி தேர்தலை அமைதியாக சுதந்திரமாக நடக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.தேர்தலில் போலீசாரை தவிர வனத்துறை அதிகாரிகள், ஓய்வு பெற்ற போலீசார், ஊர்க்காவல் படையினர், முன்னாள் ராணுவ வீரர்கள் ஆகியோரும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
அண்டை மாநிலங்களிலிருந்து 3500 போலீஸார்
இவர்களை தவிர கர்நாடகா, கேரளா, மராட்டியம் மாநிலங்களில் இருந்தும் 3500 போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். மத்திய சிறப்பு பாதுகாப்பு படையை இதுவரை கேட்கவில்லை. 17-ந் தேதி நடைபெறும் முதல் கட்ட தேர்தலுக்கு 80,000 போலீசார் தமிழ்நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். 19-ந் தேதி அன்றும் இதே போன்று 80,000 போலீசார் ஈடுபடுத்தப்படுவார்கள்.
பதட்டம் 10 சதவீதம்
தமிழ்நாட்டில் 10 சதவீதம் வாக்கு சாவடிகள் பதட்டம் நிறைந்ததாக கருதப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. சென்னையில் உள்ள அனைத்து வாக்குசாவடிகளிலும் கண்காணிப்பு காமரா வைத்து கண்காணிக்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. எனவே மாநகராட்சி தேர்தல் அதிகாரியான கமிஷனரும் தேர்தல் ஆணையமும் முடிவு செய்து அதற்கான ஏற்பாட்டை செய்வார்கள என்றார் அவர்.
சென்னையில் 15,000 போலீ்ஸ் பாதுகாப்பு
சென்னை மாநகரில் 15,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள் என்றும், 1600 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்றும், அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்படும் என்றும் மாநகர கூடுதல் ஆணையர் தாமரைக்கண்ணன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications