என் மீதான நம்பிக்கைத் துரோக குற்றச்சாட்டை கடுமையாக மறுக்கிறேன்- கனிமொழி
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் கனிமொழி. கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி லஞ்சப் பணம் கைமாறியதாக சிபிஐ கூறியுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைஞர் டிவியின் ஒரு பங்குதாரர் என்ற அடிப்படையில் கனிமொழி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சமீபத்தில் சிபிஐ புதிய குற்றச்சாட்டை சிபிஐ,சிறப்பு சிபிஐ கோர்ட்டில் தாக்கல் செய்தது. அதில் நம்பிக்கை துரோகம் செய்ததாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் ஆயுள் தண்டனை வரைசிறைத் தண்டனை கிடைக்கும் என்பதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில், கனிமொழி உள்ளிட்டோர் தங்கள் மீதான நம்பிக்கைத் துரோக குற்றச்சாட்டை கடுமையாக மறுத்துள்ளனர். நேற்று நீதிபதி ஓ.பி.ஷைனி முன்னிலையில் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கனிமொழி உள்ளிட்டோரின் வழக்கறிஞர்கள் தங்களது மறுப்பு ஆவணங்களைத் தாக்கல் செய்தனர்.
கனிமொழி, கலைஞர் டிவி தலைமை செயலதிகாரி சரத்குமார் ரெட்டி ஆகியோர் தங்களது வழக்கறிஞர் அல்தாப் மூலம் தாக்கல் செய்த மறுப்பில் கூறுகையில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழங்கியதில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. அலைக்கற்றைகளை நான் பெறவில்லை, அதை விற்கும் பதவியிலும் நான் இல்லை. இந்த நிலையில் அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக என் மீது கூடுதலாகக் குற்றஞ்சாட்டுவதை ஏற்க முடியாது. அலைக்கற்றை ஒதுக்கீட்டில் எனக்குப் பங்கு இருப்பதாக சி.பி.ஐ.யே இதற்கு முன்னால் குற்றம்சாட்டவில்லை என்று கூறியிருந்தனர்.
அல்தாப் மேலும் கூறுகையில், கனிமொழி, சரத் குமார் இருவரும் 2ஜி அலைக்கற்றைகளைப் பெறவில்லை. அவற்றை வழங்கும் பதவிகளிலும் அவர்கள் இல்லை. அவ்விருவரும் பொது ஊழியரும் (அரசு ஊழியர்) அல்லர். எனவே அரசுக்கு எதிராக நம்பிக்கைத் துரோகம் செய்ததாக அவர்கள் மீது குற்றவியல் குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்று வாதிட்டார்.
இதற்கு சிபிஐ தரப்பில் பதிலளிக்கையில், முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ. ராசாவும் வேறு 2 அரசு ஊழியர்களும் தாங்கள் வகித்த பதவி காரணமாக 2ஜி அலைக்கற்றையை வழங்கும் இடத்தில் இருந்தனர். விலை மதிப்பற்ற இந்த அலைக்கற்றைகளை விற்பதில் அவர்கள் சட்டத்தை மீறிச் செயல்பட்டனர். இதற்காக மற்றவர்களுடன் கூட்டு சேர்ந்து சதி செய்துள்ளனர். ஏல முறையில் அல்லாது முதலில் வந்தவருக்கே முதலில் உரிமை என்று முடிவு செய்தது, மனுக்களை ஏற்றது போன்ற பல செயல்களில் சதித்திட்டம் இழையோடுகிறது. எனவே அவர்கள் மீதும் பணப் பயன் அடைந்தவர்கள் மீதும் நம்பிக்கைத் துரோக குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டது.
திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான கரீம் மொரானியின் வக்கீல் கூறுகையில், முதல் குற்றப் பத்திரிகையில் என்னுடைய பெயர் இல்லை; இரண்டாவது குற்றப் பத்திரிகையிலும் கிரிமினல் சதியில் ஈடுபட்டதாக என் மீது குற்றம்சாட்டப்படவில்லை. இப்போது மட்டும் புதிதாக அரசுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டதாக என் மீது எப்படி குற்றம்சாட்டுகிறார்கள்?' என்று கேட்டார்.
அதேபோல சித்தார்த் பெகுராவின் வக்கீல் வாதிடுகையில், 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் சட்டம், நீதித்துறை என்ன கருத்து தெரிவித்தது என்று இந்த நீதிமன்றம் சி.பி.ஐ.யிடம் கேட்டது. இதையடுத்து சி.பி.ஐ.க்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. இதுவரை தான் மறைத்துவந்த ரகசியங்கள் அம்பலமாகிவிடுமோ என்ற அச்சத்தில்தான் இப்படி ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை என்னுடைய கட்சிக்காரர் மீது திணித்து கூடுதல் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்கிறது; அது மட்டும் அல்லாது இது காலம் கடத்தும் உத்தியுமாகும் என்றார்.