தேவைப்பட்டால் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டுக் கொள்ளுங்கள்- கிரண் பேடி
டெல்லி: அன்னா ஹஸாரே குழுவினர் மீது தொடர்ந்து அவதூறுகளை வீசுவதற்குப் பதில் பேசாமல் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டு விடுங்கள் என்று ஆவேசமாக கூறியுள்ளார் கிரண் பேடி.
இதுகுறித்து அவர் கூறுகையில், அன்னா குழுவைச் சேர்ந்த ஒவ்வொருவரையும் படிப்படியாக குறி வைத்து அவமானப்படுத்தி அவதூறு கூறி வருகிறார்கள். திட்டமிட்டு இது செய்யப்படுகிறது. தொடக்கத்திலிருந்தே இது செய்யப்படுகிறது.
தேசிய அளவி்ல் நாட்டையே சூறையாடிக் கொண்டிருக்கும் ஊழலை எதிர்த்து அன்னா ஹஸாரே குழு தனது சொந்தக் காசைப் போட்டு பல்வேறு போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த நாங்கள் கடுமையாக முயன்று கொண்டிருக்கிறோம். ஜன் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறோம்.
அன்னா ஹஸாரே குழுவுக்கு வரும் நன்கொடைகளை எங்களது உறுப்பினர் அரவிந்த் கேஜ்ரிவால் தான் நடத்தி வரும் அறக்கட்டளையின் கணக்கில் வரவு வைப்பதாக குற்றச்சாட்டை இப்போது வைத்துள்ளனர். இது நிச்சயம் தவறான குற்றச்சாட்டு. அந்த அறக்கட்டளையில் எங்களது உறுப்பினர்கள் யாருமே உறுப்பினர்களாக இல்லை.
இப்படி அவதூறாகப் பேசி வருவதற்குப் பதில் பேசாமல் எங்களில் யாரையாவது தூக்கில் போட்டு விடுங்கள். அப்போதாவது இந்த அவதூறுகளை நிறுத்துகிறார்களா என்று பார்க்கலாம் என்றார் பேடி.
அக்னிவேஷின் கடும் குற்றச்சாட்டு
இதற்கிடையே, அன்னா குழுவைச் சேர்ந்த சுவாமி அக்னிவேஷ் நேற்று ஒரு பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். அவர் கூறுகையில், ஊழலுக்கு எதிரான இந்தியா என்ற போராட்ட அமைப்பின் மூலம் கிடைத்த ரூ. 80 லட்சம் வரையிலான நன்கொடைகளை அரவிந்த் கேஜ்ரிவால் சுருட்டி விட்டார். இதை தான் நடத்தி வரும் பொதுமக்கள் நலனுக்காக ஆய்வுக் கழகம் என்ற அறக்கட்டளையின் கணக்குக்குக் கொண்டு போய் விட்டார் என்று அவர் கூறினார்.
இதற்கு அன்னா ஹஸாரே குழு மறுப்பு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications