கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தால் மத்திய அரசுக்கு பல கோடி நஷ்டம்
கூடங்குளம்: கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் அணுமின் நிலைய பணிகள் முடங்கியுள்ளது. இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி 3வது கட்டமாக இடிந்தகரையில் நேற்று 12வது நாளாக பொதுமக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அமலிநகர், ஆலந்தலை கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர். அணுமின் நிலையத்துக்கு எதிராக இடிந்தகரையில் மக்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்து வருவதால் அணுமின் நிலைய ஊழியர்கள் தன்னிச்சையாக பணிக்கு செல்ல முடியவில்லை. மேலும் பாதுகாப்பு காரணமாக அணுமின் நிலைய நிர்வாகமும் அவர்களை பணிக்கு வர அனுமதிக்கவில்லை. இதனால் அணுமின் நிலையத்தின் கட்டுபாட்டு அறைகள் பராமரிப்பின்றி உள்ளதால் அவைகளின் செயல்திறன் நாளுக்கு நாள் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊழியர்கள் நீண்ட நாள் வேலைக்கு செல்லாததால் அவர்களின் இந்த கால கட்டத்தை விடுப்பில் கழிப்பதா, அல்லது நோ வொர்க், நோ பே விதிமுறையை பின்பற்றுவதா என்பது குறித்து மத்திய அரசிடம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் கேட்டுள்ளது. இது தவிர இந்திய-ரஷ்ய அணு சக்தி ஒப்பந்தப்படி ரஷ்ய நாட்டின் ஆடம்ஸ்ட் ராய் எக்ஸ்போர்ட் என்ற ரஷ்ய அணுசக்தி ஏற்றுமதி கழகத்தின் அணு விஞ்ஞானிகள், என்ஜினியர்கள் என சுமார் 100 பேர் கூடங்குளத்திலேயே தங்கியுள்ளனர். அவர்களும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் ஒப்பந்தப்படி அவர்களுக்கான செலவினங்கள், ஊதியம் உள்ளிட்ட செலவுகளை இந்திய அணுமின் நிலைய கழகமே ஏற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் கூடங்குளம் அணுமின் நிலைய வாளகத்தினுள் பல்வேறுபட்ட அணு உலைக்கான விலை உயர்ந்த உபகரணங்கள் மழையில் நனைந்து பராமரிப்பின்றி உள்ளன. சுமார் 700க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் இந்த பராமரிப்பு பணியை செய்து வந்தனர். இவை மட்டுமல்லாமல் விலை உயர்ந்த அணுசக்தி சம்பந்தப்பட்ட உபகரணங்கள் குடோனில் பழுதடைந்து வருகின்றன. இதனால் மத்திய அரசுக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications