செங்கோட்டை, ஆலங்குலம் சேர்மன் தேர்தல்: அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் தோல்வி
செங்கோட்டை: செங்கோட்டை மற்றும் ஆலங்குலம் பஞ்சாயத்து யூனியன் தலைவர் தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் தோல்வியடைந்தனர்.
செங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் உள்ள 5 வார்டுகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருந்தது. அதிமுகவைச் சேர்ந்தவர்கள் வெற்றி பெறுவது உறுதியான நிலையில் சேர்மன் பதவியை பெற 1வது வார்டைச் சேர்ந்த செல்வராஜும், 5வது வார்டைச் சேர்ந்த முருகையாவும் முயற்சி மேற்கொண்டனர். அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக 1வது வார்டை சேர்ந்த செல்வராஜ் அறிவிக்கப்பட்டார். நேற்று காலை 10 மணிக்கு தேர்தல் நடந்தது.
அதில் அதிகாரப்பூர்வ வேட்பாளர் செல்வராஜுக்கு எதிராக 5வது வார்டு கவுன்சிலர் முருகையா வேட்பு மனு தாக்கல் செய்தார். வாக்குப்பதிவில் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் முருகையா சேர்மனாக வெற்றி பெற்றார்.
ஆலங்குளம் பஞ்சாயத்து யூனியனில் மொத்தம் உள்ள 18 வார்டுகளில் அதிமுக 11 வார்டுகளிலும், திமுக 2 வார்டுகளிலும், சுயேட்சைகள் 5 வார்டுகளிலும் வெற்றி பெற்றனர். சேர்மன பதவிக்கு அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ வேட்பாளர் சிதம்பர செல்வி மற்றும் முன்னாள் யூனியன் சேர்மனான அதிமுகவைச் சேர்ந்த எப்சி கார்த்திகேயன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இதில் எப்சி கார்த்திகேயன் 10 ஓட்டுகள் பெற்று யூனியன் சேர்மனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். சிதம்பர செல்வி 8 ஓட்டுகள் பெற்று தோல்வியடைந்தார். அதிகாரப்பூர்வ வேட்பாளர்ளை எதிர்த்து போட்டியிட்டவர்கள் வெற்றி பெற்றது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.