சூர சம்ஹார நாளில் முருகனை உதாரணம் காட்டி கருணாநிதி பேச்சு

Subscribe to Oneindia Tamil

Karunanidhi
சென்னை: சென்னையில் நடந்த திமுக குடும்ப திருமண விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் கருணாநிதி, கடவுள் முருகனை மேற்கோள் காட்டிப் பேசியதால் சலசலப்பு ஏற்பட்டது.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் மகன் கஸ்தூரி செல்வன் என்கிற வினோத் குமாருக்கும், சியாமளா தேவிக்கும் இன்று திருமணம் நடந்தது. அதை கருணாநிதி நடத்தி வைத்தார்.

வழக்கமாக தமிழ் வாடைதான் கருணாநிதி பேச்சில் தூக்கலாக இருக்கும். இன்று, அவரது பேச்சில் ஆன்மீக வாடையும் சேர்த்து அடித்தது.

கருணாநிதியின் பேச்சு:

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர், வெற்றிச்செல்வன் மகன் கஸ்தூரி செல்வன் என்கிற வினோத் குமார் - கரூர் என்.ஆர்.என். வெங்கட்ராமன் மகள் சியாமளா தேவி வாழ்க்கை ஒப்பந்த விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி அருளிய நண்பர்களே!

இந்த மண விழா மிக சிறப்புடன் சீரார்ந்த வகையில் எல்லோருடைய உள்ளமும் ஒன்றிய நிலையில் இனிது நிகழ்ந்திருக்கின்றது. வெற்றிச்செல்வன் இந்தப் பெயரை எப்படி தக்க வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர் நடந்து முடிந்த பல்வேறு நிகழ்வுகளில் குறிப்பாக தேர்தல்களில் வெற்றி அடைந்தாலும் - வெற்றி வாய்ப்பை இழந்தாலும் - அப்போதெல்லாம் வெற்றிச் செல்வனாகவே திகழ்ந்து நம்மை களிப்பில் ஆழ்த்தியிருக்கிறார். அவர் என்னைச் சந்திப்பதற்காக சென்னைக்கு வந்தாலும் - அல்லது கிருஷ்ணகிரிக்கு வந்தாலும் எப்போதும் ஒரே முகம் தான். முருகனுக்குச் சொல்வார்கள், ஆறு முகங்களுக்கும் ஓர் இலக்கணம்!

“கூறும் அடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே - குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே - வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே" - என்று இப்படி ஒரு முகத்துக்கு ஓர் இலக்கணம், ஒரு வரலாறு சொல்வார்கள்.

ஆனால் வெற்றிச்செல்வனின் முகம், ஆறுமுகத்தைப் போல, அவ்வப்போது வேறுபடுகின்ற முகம் அல்ல, எப்பொழுதும் ஒரே முகம் தான், வெற்றிச் செல்வன் என்ற முகம் தான்!

நான் அவரை என் வீட்டிற்கு வந்திருக்கும்போது பார்த்தாலும், அல்லது வேறு வெளியூர்களில் காணும் போதானாலும், “என்ன வெற்றி, எங்கே வந்தாய்?" என்று கேட்கும் போது, “உங்களைப் பார்க்கத்தான்" என்ற ஒரே பதிலோடு நிறுத்திக் கொள்வார். அதற்கு மேல் எந்த விவரங்களையும் வெளியிட மாட்டார். அப்படி ஒரு “குருபக்தி" என்பார்களே, அதை வெளியிடக்கூடிய உணர்வு, வெற்றிச் செல்வனைப் போல இந்த இயக்கத்திலே வேறு யார் இடத்திலும் நான் கண்டதில்லை.

அவரை அந்த வட்டாரத்திலே அறிந்தவர்கள் மிகுந்த சாந்தமானவர் என்று கூறக் கேட்டிருக்கிறேன். அவர் பெற்ற வெற்றிகளையெல்லாம் - மற்றவர்கள் வெற்றி பெறுவதற்கு வழங்கிய உழைப்பையெல்லாம் நான் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படி இந்த இயக்கத்திற்காக தன்னையே வாழ்விலும், தாழ்விலும் எந்த நிலையிலும் ஒப்படைத்துக் கொண்டிருப்பவர் வெற்றிச்செல்வன்.

அவர் பெயரே, வெற்றிச்செல்வன் என்று அமைந்திருப்பதற்கு காரணம், அவருடைய தாய் தந்தையர், அவர் பிறந்த பொழுதே, இவர் என்றைக்கும் வெற்றியோடு தான் வாழ்வார் என்று எண்ணியோ என்னவோ, அந்தப் பெயரை அவருக்குச் சூட்டியிருக்கிறார்கள். ஏனென்றால் தோல்வி ஏற்படுகின்ற நேரத்திலே கூட அதைத் தோல்வி என்று கருதாமல், அதையும் வெற்றி என்று கருதக் கூடிய ஒருவர், இந்த இயக்கத்திலே இருக்கிறார் என்றால், அது வெற்றிச்செல்வன் ஒருவர் தான்.

அவரை வாழ்த்துகின்ற வகையில், அவரைப் போற்றுகின்ற வகையில், அவரைப் பாராட்டுகின்ற நிலையில் இந்த மணவிழாவிலே கலந்து கொண்டு, அவருக்கு மேலும் ஊக்கத்தை வழங்கிக் கொண்டிருக்கிறோம் என்பது தான் உண்மை.

இந்த இயக்கத்தில் வந்து சேருகிறவர்கள், இங்கேயே இருந்து இயக்கத்தை நடத்துபவர்கள், யாராயினும் அவர்களையெல்லாம் “வெற்றிச் செல்வனைப் பார்த்து நடந்து கொள்ளுங்கள்" என்று கூறுகின்ற அளவிற்கு அவர் உதாரணமாகத் திகழக்கூடியவர்.

ஏனென்றால் அவரைச் சந்திக்கும்போது, முகத்தைப் பார்த்து இவர் மகிழ்ச்சியாக இருக்கிறாரா அல்லது கவலையாக இருக்கிறாரா என்பதையே கண்டு பிடிக்க முடியாது.

அப்படிப்பட்ட ஒரு மனிதர், வெற்றிச்செல்வன். அவருடைய இல்லத்தில் கஸ்தூரிசெல்வன் என்கிற வினோத்குமாரும், சியாமளா தேவியும் ஒன்றுபட்டு மண வாழ்க்கையை நடத்துகின்ற விழாவின் ஆரம்பம் தான் இன்றைக்கு. அந்த மணவிழா இன்று தொடங்கியது காலமெல்லாம் அவர்களைக் களிப்பில் ஆழ்த்துகின்ற விழாவாக அமையட்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார் கருணாநிதி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+