ஆரம்பத்திலிருந்தே இலங்கையை காக்கத்தான் துடிக்கிறது இந்தியா- டாக்டர் ராமதாஸ் வேதனை
சென்னை: இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசோ தொடக்கத்திலிருந்தே இலங்கையை காப்பாற்றுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வேதனை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு நற்சான்றிதழ் வழங்கும் வகையில், அங்கு 2013-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை நடத்துவதற்கான உரிமையை இந்தியா பெற்றுத் தந்திருக்கிறது.
2009-ம் ஆண்டு நடைபெற்ற போரில் மனித உரிமைகளை காலில் போட்டு மிதித்தும், உலக நாடுகளின் வேண்டுகோள்களை செவி மடுக்காமலும், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களை ராஜபக்சேவின் படைகள் கொன்று குவித்தன.
இலங்கை போர் குறித்து விசாரணை நடத்திய ஐ.நா. வல்லுநர் குழுவும் இதை உறுதி செய்துள்ளது. இத்தகைய குற்றத்திற்காக இலங்கையை காமன்வெல்த் அமைப்பிலிருந்தே நீக்க வேண்டும் என்ற கோரிக்கை 2 ஆண்டுகளுக்கு முன்பு எழுந்த போது இலங்கையை காப்பாற்றியது இந்தியாதான். அதன் பின்னர் 2013-ம் ஆண்டிற்கான காமன்வெல்த் மாநாடு இலங்கையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதுபற்றி முடிவெடுப்பதற்காக ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் கடந்த 2 நாட்களாக நடைபெற்ற காமன்வெல்த் தலைவர்கள் கூட்டத்தில், போர்க் குற்றத்தை இழைத்த ஒரு நாட்டில் காமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனும், கனடா பிரதமர் ஸ்டீபன் ஹார்பரும் வெளிப்படையாக எதிர்ப்புத் தெரிவித்தனர்.
இந்த நிலைப்பாட்டை வலியுறுத்தி கனடா பிரதமர் கூட்டத்தில் இருந்தே வெளி நடப்புச் செய்திருக்கிறார். இதையெல்லாம் பொருட்படுத்தாமல் தமக்கு உள்ள செல்வாக்கை பயன்படுத்தி அடுத்த காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில்தான் நடத்த வேண்டும் என்று இந்தியா அறிவிக்க வைத்துள்ளது.
அது மட்டுமின்றி இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்கவும், இனி வரும் காலத்தில் இது போன்ற குற்றங்கள் நடப்பதை தடுக்கவும் காமன்வெல்த் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என பல்வேறு நாடுகள் முன் வைத்த கோரிக்கையும் இந்தியாவின் முயற்சியால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடு கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இலங்கை அரசுக்கு எதிராக போர்க் குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய கடமையும், பொறுப்பும் இந்திய அரசுக்கு உண்டு. ஆனால் மத்திய அரசோ தொடக்கத்திலிருந்தே இலங்கையை காப்பாற்றுவதில் தான் தீவிரம் காட்டி வருகிறது.
இலங்கை தொடர்பான அணுகுமுறையை மத்திய அரசு இன்னும் மாற்றிக் கொள்ளவில்லை என்பது தெளிவாகிறது. தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு இலங்கைக்கு ஆதரவான போக்கை கைவிடுவதுடன், அந்நாட்டு அரசுக்கு எதிராக போர்க்குற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய அரசு முன்வர வேண்டும். இதற்காக தமிழக அரசும், தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் ஒன்றுபட்டு குரல் கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார் ராமதாஸ்.