கணவருடன் கோபித்துக் கொண்டு மும்பை சென்று தவித்த தூத்துக்குடி பெண்
மும்பை : கணவருடன் கோபித்து கொண்டு மும்பை சென்ற தமிழ் பெண் மும்பை ரயில் நிலையத்தில் சுற்றி திரிந்தார். பணம், நகையை இழந்து தமிழ் பிரமுகர்களின் உதவியுடன் சொந்த ஊர் திரும்பினார்.
தூத்துக்குடி மாவட்டம், ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் குமார்(35). கூலித்தொழிலாளர். இவரது மனைவி செல்வி(30). சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்ட இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டது. இதில் கோபித்து கொண்ட செல்வி கடந்த 5 நாட்களுக்கு முன் நாகர்கோவில்- மும்பை ரயிலில் ஏறி, மும்பை சென்றார்.
மும்பை சென்று இறங்கிய செல்விக்கு அங்கு யாரையும் பழக்கம் இல்லாமல் ரயில் நிலையத்திலேயே செய்வதறியாது நின்றார். அப்போது அங்கு வந்த பெங்களூரை சேர்ந்த பெண் ஒருவர் செல்விக்கு ஆதரவாக பேசியுள்ளார். மேலும் மும்பையில் பல இடங்களுக்கு செல்வியை அழைத்து சென்றார்.
தொடர்ந்து பல இடங்களில் அலைந்த போது கணவரிடம் தான் கோபித்து கொண்டு வீட்டை விட்டு வந்தது தவறு என செல்வி உணர்ந்தார்.
இதனையடுத்து சொந்த ஊருக்கு திரும்ப முடிவு செய்தார். ஆனால் அதற்குள் அவர் வைத்திருந்த பணம் முழுவதும் செலவாகி இருந்தது. இதனால் அவருக்கு ஆதரவாக இருந்த பெங்களூர் பெண்ணிடம் தான் அணிந்திருந்த வெள்ளி கொலுசை கழற்றி கொடுத்து அதை விற்று தருமாறு கூறினார்.
இனி செல்வியிடம் பணம் இல்லை என்பதை அறிந்த பெங்களூர் பெண் கொலுசை பெற்று கொண்டு சென்றுவி்ட்டார். செல்வி தனிமையில் நிற்பதை பார்த்த மற்றொரு பெண் அவரை, சி.எஸ்.டி. ரயில் நிலைய போலீசாரிடம் அழைத்து சென்றார். போலீசாரிடம் தனக்கு நடந்து சம்பவங்கள் குறித்து செல்வி கூறினார்.
பின்னர் மும்பையில் உள்ள சில தமிழ் பிரமுகர்கள், செல்விக்கு சொந்த ஊர் திரும்ப தேவையான உதவிகளை செய்தனர். செலவியிடம் கொலுசுகளை திருடி சென்ற மர்மபெண் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.