தங்கபாலுவை கைது செய் என கோஷமிட்ட 11 பேருக்கு ரூ 200 அபராதம்!
சென்னை: சென்னை மயிலாப்பூர் சட்டசபைத் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்த பின்னும் அதில் தொடர்ந்து நீடித்து வரும் தங்கபாலுவுக்கு எதிராக ஒழிக கோஷம் போட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்திய போட்டி வேட்பாளர் சிவகாமி உள்ளிட்ட 11 பேருக்கு சைதாப்பேட்டை கோர்ட் தலா ரூ.200 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.
கடந்த சட்டசபைத் தேர்தலில் பற்பல குழப்பங்களுக்கு மத்தியில் மயிலாப்பூரில் தானே வேட்பாளராகி போட்டியிட்டு படு தோல்வி அடைந்தார் தங்கபாலு. அவரை எதிர்த்து சிவகாமி என்பவர் போட்டி வேட்பாளராக களம் இறங்கி மிக மோசமான தோல்வியைத் தழுவினார்.
இந்த நிலையில் ஏப்ரல் 9ம் தேதி லஸ் கார்னர் சந்திப்பில் சிவகாமி தலைமையில் சிலர் கூடி ஒரு போராட்டம் நடத்தினர். போக்குவரத்துக்கு இடையூறாக நின்று கொண்டு, வாகனங்களைப் போக விடாமல் தடுத்து பணம் பட்டுவாடா செய்த காங்கிரஸ் வேட்பாளர் தங்கபாலுவை கைது செய் என கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதையடுத்து சிவகாமி, அன்பழகன், ரவி உள்ளிட்ட 11 பேரை போலீஸார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
இவர்கள் மீது சைதாப்பேட்டை 18வது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மாஜிஸ்திரேட் தீர்ப்பளித்தார். அதன்படி, குற்றத்தை 11 பேரும் ஒப்புக் கொண்டதால், அவர்களுக்கு தலா ரூ. 200 அபராதம் விதிப்பதாக மாஜிஸ்திரேட் தெரிவித்தார். பின்னர் அனைவரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத்தைக் கட்டி விட்டு வெளியேறினர்.












Click it and Unblock the Notifications