கண்ணீருடன் இருக்கும் மக்களின் வெந்த புண்ணில் வேலை பாய்ச்சும் மத்திய அரசு- ஜெ. தாக்கு
சென்னை: விலைவாசி உயர்வால் இன்னல்களை இந்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டு, கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:
மத்திய அரசின் தவறான பொருளாதாரக் கொள்கை காரணமாகவும், நிர்வாகத் திறமையின்மை காரணமாகவும் அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே செல்கின்ற இந்தத் தருணத்தில், மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையினை அவ்வப்போது உயர்த்தி வருகிறது.
இவ்வாறு பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதால், ஏழை - எளிய, சாமானிய மக்கள் எவ்வாறு பாதிக்கப்படுவார்கள் என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலை கொள்ளாமல் மத்திய அரசு பெட்ரோலியப் பொருட்களின் விலையை உயர்த்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
கடந்த ஜுன் மாதம் டீசல், சமையல் எரிவாயு மற்றும் மண்எண்ணெய் ஆகியவற்றுக்கான விலையை உயர்த்திய மத்திய அரசு, 15-9-2011 முதல் பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 61 காசுகள் என்ற அளவில் உயர்த்தியது.
இந்த உயர்வினை அடுத்து 2 மாதங்களுக்குள்ளாகவே பெட்ரோலின் விலையை லிட்டருக்கு 1 ரூபாய் 82 காசுகள் என்ற அளவில் மீண்டும் கணிசமாக மத்திய அரசு இன்று முதல் உயர்த்தியுள்ளது.
இந்த விலையேற்றம் காரணமாக இருசக்கர வாகனங்களை பயன்படுத்தும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். விலைவாசியை குறைப்பதற்கான நடவடிக்கையை எடுப்பதற்கு பதிலாக விலைவாசியை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளைத் தான் மத்திய அரசு தொடர்ந்து எடுத்து வருகிறது.
விலைவாசி உயர்வால் இன்னல்களை இந்நாட்டு மக்கள் அனுபவித்துக் கொண்டு, கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கும் இந்த வேளையில், தற்போதைய பெட்ரோல் விலை உயர்வு வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் அமைந்துள்ளது.
எனவே, இந்த பெட்ரோல் விலை உயர்வு எவராலும் ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல. பெட்ரோல் விலை உயர்வுக்கு நான் எனது கடும் கண்டனத்தைத் தெரிவிப்பதுடன், இந்த உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.
மம்தா கோபம்
இதற்கிடையே, பெட்ரோல் விலை உயர்வு குறித்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கோபமடைந்துள்ளார். தங்களிடம் ஆலோசனை கேட்காமல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் இதுதொடர்பாக அக்கட்சியின் ஆட்சிமன்றக் குழுக் கூட்டமும் கூட்டப்பட்டுள்ளது.
வழக்கமாக இதுபோல பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்படும்போதெல்லாம் ஒப்புக்கு ஏதாவது ஒரு கண்டனத்தைத் தெரிவித்து விட்டு அமைதியாகி விடுவது ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் வழக்கமாக உள்ளது. அந்தவகையில் மம்தாவும் இதற்கு முன்பு பெட்ரோல், டீசல் உயர்த்தப்பட்டபோதெல்லாம் கண் துடைப்புக்குக் கண்டனம் தெரிவித்து விட்டு அமைதியாகி விடுவார். இந்தமுறையும் அப்படித்தான் செய்வாரா அல்லது ஏதாவது புரட்சி செய்வாரா என்பது தெரியவில்லை.