நாடு முழுவதும் பெட்ரோல் விலை நள்ளிரவில் ரூ. 1.82 உயர்வு- சென்னையில் லிட்டர் ரூ. 72.68
முன்பு பெட்ரோல் விலையை நிர்ணயிக்கும் அதிகாரத்தை அரசே வைத்திருந்தது. அதை கடந்த ஜூன் மாதத்தில் அரசுத் துறை எண்ணெய் நிறுவனங்களிடம் ஒப்படைத்தது. இதையடுத்து அவ்வப்போது இந்த நிறுவனங்கள் பெட்ரோல், விலையை உயர்த்தி வருகின்றன.
கடைசியாக செப்டம்பர் 16ம் தேதி பெட்ரோல் விலை 3.14 ரூபாய் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல் விலை உயர்ந்துள்ளது. இந்த முறை 1.80 ரூபாய் அளவுக்கு பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் பெட்ரோல் விலை உயர்த்தப்படுவது இது 5வது முறையாகும். நாட்டின் பணவீக்கம் 12 சதவீதத்தைத் தாண்டியுள்ள நிலையில் 'போனஸாக' பெட்ரோல் விலை உயர்வை மக்களுக்கு அரசு கொடுத்துள்ளது.
கச்சா எண்ணெய் இறக்குமதி செலவு அதிகரிப்பு, இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை காரணமாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டிருப்பதாக எண்ணெய் நிறுவனங்கள் கூறியுள்ளன.
நேற்று நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்தது. இதையடுத்து சென்னையில் தற்போது ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை ரூ. 72.68 ஆக அதிகரித்துள்ளது.