லோக்பால் மசோதா தொடர்பாக அன்னாவை நம்பியதற்கு வருந்துகிறேன்- 94 வயது காந்தியவாதி
காந்திய சேவா மற்றும் சத்யாகிரக பிரிகேட் என்ற அமைப்பின் பொதுச் செயலாளராக இருப்பவர் தத். இவரும், இவரது அமைப்பைச் சேர்ந்த ஐந்து பேரும் லோக்பால் விவகாரம் தொடர்பாக கடந்த 2010ம் ஆண்டு ஜனவரி 30ம் தேதி சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர். லோக்பால் மசோதாவுக்காக முதன் முதலில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் இவர்கள்தான்.
அதன் பின்னர் நடந்தது குறித்து தத் கூறுகையில், உண்ணாவிரதம் எங்களை கிரண் பேடியும், சுவாமி அக்னிவேஷும் அணுகி எங்களது போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக் கொண்டனர். தாங்கள் இதுதொடர்பாக போராடப் போவதாகவும், அதற்காக உங்களது போராட்டத்தை நிறுத்த வேண்டும் என்றும் கோரினர்.
அதற்கு மதிப்பளித்து நாங்களும் போராட்டத்தைக் கைவிட்டோம். ஆனால் அப்படிச் செய்திருக்கக் கூடாது என்று இப்போது உணர்கிறேன். நாங்கள் உறுதியுடன் போராட்டத்தில் ஈடுபட்டோம். ஆனால் அவர்களிடம் அதை எதிர்பார்க்காமல் நம்பி மோசம் போய் விட்டோம்.
அன்னா குழுவினர் யாருமே ஸ்திரமானவர்களாக இல்லை. உறுதியானவர்களாக இல்லை. உண்மையானவர்களாக இல்லை. குறிப்பாக அரவிந்த் கேஜ்ரிவால் தன் மீதான மக்களின் நம்பிக்கையை இழந்து விட்டார். அந்தக் குழுவில் இருப்பவர்கள் எல்லாம் ஆமாம் சாமிகளாக உள்ளனர். எந்தவிதமான உறுதியும் அவர்களிடம் இல்லை.
காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் எல்லாம் எதிர்த்துப் பிரசாரம் செய்வோம் என்பது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. ஹஸாரேவும் தனது நிலையை அடிக்கடி மாற்றி வருகிறார். முதலில் காங்கிரஸை எதிர்க்க மாட்டேன் என்றார். தற்போது எதிர்த்துப் பிரசாரம் செய்வேன் என்கிறார்.
ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம். அதேசமயம், அவர்களின் ஜன் லோக்பால் மசோதாவில் பல அம்சங்களை நாங்கள் ஏற்கவில்லை என்றார் சாம்பு.