ஈரோட்டில் பலத்த மழையில் 30 விடுகள் இடிந்தது
ஈரோடு: ஈரோட்டில் பெய்த பலத்த மழையில் 30 வீடுகள் இடிந்து விழுந்தது. காய்கறிகள் மழையில் நனைந்து அழுக ஆரம்பித்துள்ளது.
ஈரோட்டில் கடந்த 2 வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று அதிகாலை 4 மணிக்கு துவங்கிய மழை 3 மணிநேரம் தொடர்ந்தது. இதில் பவானி பழனிபுரம் முதல் தெருவில் இருந்த 4 வீடுகள் இடிந்து விழுந்தன. மேலும் பாண்டிபாளையம், சேர்வராயன்பாளையம், ஜம்பை நல்லபாளையம், ஒலகடம் ஆகிய பகுதிகளில் 5 வீடுகள் இடிந்து விழுந்தன. இதேபோல சத்தியமங்கலத்தில் 9 வீடுகள் மழைக்கு தாக்குபிடிக்காமல் இடிந்துவிழுந்தன.
ஈரோடு மாவட்டத்தில் நேற்று பெய்த பலத்த மழையில், மாவட்டத்தின் பல பகுதிகளில் மொத்தம் 30 வீடுகள் இடிந்து விழந்தன. வீடுகள் இடிந்து விழுந்தாலும் யாரும் இடிப்பாடுகளில் சிக்கி காயமடைவில்லை.
அணை மட்டம் உயர்வு:
மழை காரணமாக பவானி சாகர் அணையில் 86.15 அடியாக உயர்ந்தது. பவானி ஆறு ஓடும் பகுதியில் பலத்த மழை பெய்ததால், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக காலிங்கராயன் அணை நிரம்பியது. இதனால் ஆற்றின் கரையோரங்களில் வசிப்பவர்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
காய்கறிகள் அழுகுகிறது:
ஈரோடு மார்க்கெட்டில் 2 நாட்களாக பெய்து வரும் மழைக் காரணமாக காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பீட்ரூட், மல்லி, புதினா ஆகிய காய்கறிகள் 2 நாட்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என்பதால் அழுக ஆரம்பித்துள்ளது. காய்கறிகள் லோடு வரும் வழியிலேயே மழையில் நனைந்து விடுவதால் விரைவில் அழுகிவிடுகிறது, என வியாபாரிகள் வருத்ததுடன் தெரிவித்தனர்.