தமிழக மழை, வெள்ளத்திற்கு 44 பேர் பலி: தண்ணீரால் திணறும் திருப்பூர்
சென்னை: தமிழகத்தில் முதல் கட்ட வட கிழக்குப் பருவ மழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 44 பேர் உயிர் இழந்துள்ளனர்.
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் முதல் கட்ட வட கிழக்குப் பருவ மழை சற்றே ஓய்ந்துள்ளது. பல இடங்களில் மழை நின்று விட்ட போதிலும, சில இடங்களில் தொடர்ந்து பெய்தபடி உள்ளது.
இந்த மழையால் பல இடங்கள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. ழை விட்ட பகுதிகளிலும் கூட வெள்ளம் இன்னும் வடியவில்லை. குறிப்பாக தலைநகர் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதகிளில் பல இடங்கள் இன்னும் தீவுகளாகவே காட்சி அளிக்கிறது.
இதுவரை மழைக்கு 44 பேர் பலியாகியுள்ளனர். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரட்டிப்பு நிவாரண நிதியாக ரூ. 2 லட்சம் அளிக்குமாறு முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தனது ஆழந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது,
திருப்பூரில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 7 பேர் இறந்துள்ளனர். வீடுகளை இழந்தவர்கள் மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 10 மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உணவு, தண்ணீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்குமாறு மாவட்ட கலெக்டருக்கு உத்தரவிட்டுள்ளேன்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை, 1 லிட்டர் மண்ணெண்ணெய் மற்றும் ரூ.1000 வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் அதன் கரையோரம் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். பல ஏக்கர் நிலத்தில் பயிரிடப்பட்டிருந்த நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் வாழை சேதமடைந்துள்ளது.
கன மழையால் ஈரோட்டில் இருந்து 25 கிமீ தொலைவில் உள்ள சென்னிமலையில் 10,000 விசைத்தறி, 5,000 கைத்தறி ஆலைகள், 60 சாயப்பட்டறைகள் பாதிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.