திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் 3வது முறையாக டிஸ்மிஸ்!
சென்னை: அதிமுக ஆட்சிக்கு வந்ததும் பணி நீக்கத்திற்குள்ளாகும் மக்கள் நலப் பணியாளர்கள் இந்த முறையும் அரசின் நடவடிக்கைக்குத் தப்பவில்லை. சற்று கால தாமதமாக தற்போது இவர்களை டிஸ்மிஸ் செய்துள்ளது தமிழக அரசு. பணிநீக்கம் செய்யப்பட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்களும் திமுக ஆட்சியின்போது நியமிக்கப்பட்டவர்கள் ஆவர்.
திமுக ஆட்சிக்காலத்தின்போது ஒவ்வொரு பஞ்சாயத்திலும் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 13,500 மக்கள் நலப் பணியாளர்கள் இதுபோல பணியாற்றி வந்தனர். பஞ்சாயத்தால் மேற்கொள்ளப்படும் பணிகளை இவர்கள் செய்து வந்தனர். இவர்கள் உள்ளாட்சித் துறையின் கீழ் வருவார்கள்.
தற்காலிகப் பணியாளர்களான இவர்களுக்கு கடந்த திமுக அரசு அடுத்த ஆண்டு மே 31ம் தேதி வரை பணி நீட்டிப்பு ஆணை வழங்கியிருந்தது. இந்த நிலையில் நேற்று இரவோடு இரவாக அத்தனை பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், தமிழகத்தில் பணியாற்றி வரும் மக்கள் நலப் பணியாளர்களின் பதவிகள் கலைக்கப்படுகின்றன. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகின்றன. இந்த உத்தரவுகளை மாவட்ட கலெக்டர்கள், பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் ஆகியோர் அமல்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அரசின் இந்த நடவடிக்கைக்கு மக்கள் நலப் பணியாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதை எதிர்த்து தொடர் போராட்டங்களில் ஈடுபட அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
மக்கள் நலப் பணியாளர்கள் இதுபோல மொத்தமாக கலைக்கப்படுவது இதுமுதல் முறையல்ல. இதற்கு முன்பு 2 முறை இதுபோல நீக்கப்பட்டுள்ளனர். தற்போது 3வது முறையாக நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.