அமைச்சர் பச்சைமாலை நீக்கக் கோரி 11ம் தேதி பாஜக 10 இடங்களில் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவில்: அமைச்சர் பச்சைமாலை அமைச்சரவையில் இருந்து நீக்கக் கோரி பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் மாவட்ட தலைவர் தர்மராஜ் அறிவித்துள்ளார்.
அண்மையில் நடந்து முடியந்த உள்ளாட்சி தேர்தலில் பாஜக, திமுக மற்றும் பிற கட்சிகளும், சுயேட்சைகளும் குமரி மாவட்டத்தில் அதிக அளவில் வெற்றி பெற்றனர்.
இதன் எதிரொலியாக சமீபத்தில் நடந்த அதிமுக கூட்டங்களில் அமைச்சர் பச்சைமால் பாஜக மீது குற்றம் சாட்டி கடுமையாக பேசி வருகின்றார். இதற்கு பதிலடி தரும் விதத்தில் பாஜகவும் அதிமுக மீது குற்றம் சாட்டி வருகின்றது.
இந்த நிலையில் பாஜக மாவட்ட தலைவர் தர்மராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
தமிழக அமைச்சர் பச்சைமால் தொடர்ந்து பாஜக மற்றும் இந்து இயக்க தலைவர்களை நாகரீகமற்ற முறையில் இழிவாகப் பேசி வருகின்றார்.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோவில் விழாக்களுக்கு பாஜக மற்றும் இந்து இயக்க தலைவர்களை அழைக்கும் அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ஒரு அதிகாரியை ஏற்கனவே சஸ்பெண்ட் செய்துள்ளேன் என்றும் மிரட்டி வருகின்றார்.
இதற்கு காரணம் தனது வீட்டு அருகில் உள்ள ஆலய திருவிழாவிற்கு அமைச்சர் பச்சைமாலை அழைக்காதது தான் என்பதை அவரே ஒத்துக் கொண்டுள்ளார்.
கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திக கொள்கையுடைய திராவிட இயக்கத்தை சேர்ந்தவர்களுக்கு கோவில் விழாக்களில் கலந்துகொள்ள எவ்வித தார்மீக உரிமையும் இல்லை.
மதசார்பற்ற நாட்டில் இருந்து கோவில்களில் வரும் கோடிக்கணக்கான ரூபாய் வருவாயை மட்டும் எடுத்து மாற்று மதத்தினருக்கு மானியம் வழங்கி, போலி மதச்சார்பின்மை பேசுபவர்களுக்கு துணையாக இருக்கும் பச்சைமால் போன்றவர்கள் முதலில் தங்களை திருத்திக்கொள்ள வேண்டும்.
கோவில் விழாக்களுக்கு பாஜக மாநில தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்களை அழைக்கக்கூடாது என்று மிரட்ட பச்சைமாலுக்கு எந்த அருகதையும் இல்லை.
தனது சுயநலத்திற்காக அரசு அதிகாரிகளை தொடர்ந்து மிரட்டி வரும் அமைச்சர் பச்சைமாலை கண்டித்தும், அவரை உடனடியாக அமைச்சரவையிலிருந்து நீக்க வலியுறுத்தியும் வரும் 11ம் தேதி மாலை 4 மணிக்கு குமரி பாஜக சார்பில் 10 இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications