கனிமொழியின் ஜாமீன் மனு டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைப்பு-சிறைவாசம் தொடர்கிறது..
கடந்த 3ம் தேதி கனிமொழியின் ஜாமீன் மனுவை டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி நிராகரித்துவிட்டார். இதையடுத்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழி மேல் முறையீடு செய்தார். அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டி, குசேகாவ்ன் புரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவன அதிபர் ஆசிப் பல்வா, சினிமா தயாரிப்பாளர் கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனு இன்று நீதிபதி வி.கே.சாலி முன் விசாரணைக்கு வந்தது. கனிமொழி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் அல்தாப் அகமத் கூறுகையில், ஜாமீன் வழங்குவதில் தனக்கு ஆட்சேபணை இல்லை என்ற சிபிஐயின் கருத்தை பாட்டியாலா சிபிஐ நீதிமன்றம் கணக்கில் கொள்ளாமல் ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. எனவே ஜாமீன் வழங்க வேண்டும் என்றார்.
சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மோகன் பராசரன், கனிமொழிக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பாட்டியாலா சிபிஐ விசாரணை நீதிமன்றத்தில் தெரிவித்ததையே இங்கும் தெரிவிக்கிறோம். அந்த நிலையில் மாற்றமில்லை என்றார்.
இதையடுத்து கனிமொழியின் ஜாமீன் மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யுமாறு சிபிஐக்கு உத்தரவிட்ட நீதிமன்றம் வழக்கை டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி.
தான் ஒரு பெண், ஒரு குழந்தையின் தாய் என்ற வகையில் தனக்கு ஜாமீன் கோரியிருந்தார் கனிமொழி.
4வது முறை ஜாமீன் மறுப்பு:
கனிமொழி கடந்த மே மாதம் 20ம் தேதி கைது செய்யப்பட்டு, 6 மாதங்களாக சிறையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஜாமீன் மனுக்கள் 4 முறை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளன. இன்று 5வது முறையாக அவரது மனு விசாரணைக்கு வந்தது.
கலைஞர் டிவிக்கு ரூ. 200 கோடி தரப்பட்ட விவகாரத்தில் அவர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.