2ஜி வழக்கிலிருந்து கனிமொழி விடுபட வேண்டி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் திமுக வழிபாடு!

வழக்கில் இருந்து விடுவிக்கும் வழக்கறுத்தீஸ்வரர்
இந்தக் கோவிலுக்கும், கோர்ட், கேஸுக்கும் நிறைய தொடர்பு உள்ளது. கோர்ட் வழக்குகளில் சிக்கித் தவிப்போர், இக்கோவிலில் வந்து வழிபட்டால், வழக்கிலிருந்து விடுதலை பெறுவதாக ஐதீகம் உள்ளது. இதைக் கேள்விப்பட்டு சமீப காலமாக வழக்குகளில் சிக்குவோர், வழக்கறுத்தீஸ்வர்ர் சிறப்பு வழிபாடு நடத்துவது அதிகரித்து வருகிறது.
அந்தவகையில் ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கி ஜாமீனில் கூட வெளிவரமுடியாத நிலையில் இருக்கும் கனிமொழிக்காக இந்த கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வியாழக்கிழமை மாலை 6 மணியளவில் வெள்ளை நிற டாடா சபாரி காரில் வந்த அதிலிருந்து தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., வசந்தி ஸ்டான்லியுடன் காஞ்சிபுரம் மாவட்ட பொதுச் செயலர் விஜயகுமார் மற்றும் இருவர் வந்தனர். அனைவரும் பக்தர்கள் வெளியே வரும் பகுதி வழியாக, கோவில் உள்ளே நுழைந்தனர்.
மூலஸ்தானம் முன் சென்றதும், அர்ச்சகரிடம் வசந்தி ஸ்டான்லி (இவர் ஒரு கிறிஸ்தவர்), தான் கொண்டு வந்திருந்த, மஞ்சள் நிற பாலித்தீன் கவரைக் கொடுத்தார். அதில் வேட்டி மற்றும் அர்ச்சனைப் பொருட்கள் இருந்தன. அர்ச்சகர் அந்த பொருட்களுடன் கருவறைக்குள் சென்றார்.
சுவாமியைக் கண்ட வசந்தி ஸ்டான்லி, பக்தி பரவசத்துடன் கண் மூடி நின்றார். கனிமொழி பேரில் அர்ச்சனை செய்த அர்ச்சகர் அர்ச்சனையை முடித்துவிட்டு வந்து, வசந்தி ஸ்டான்லிக்கு மாலை அணிவித்து விபூதி, குங்குமம் பிரசாதம் வழங்கினார். அவர் பயபக்தியுடன் பெற்றுக் கொண்டார். மற்றொரு அர்ச்சகர், அவர் கொண்டு வந்த பையை திரும்பக் கொண்டு வந்து கொடுத்து அவரிடம் வைத்துக் கொள்ளும்படி கூறினார். அர்ச்சகர் மீண்டும் பையை, சுவாமியிடம் கொண்டு சென்றார்.
அப்போது மின்சாரம் போய் விட்டது. பின்னர் இரண்டு நிமிடத்தில் மின்சாரம் வந்தது. அதன் பின்னர் வசந்தி ஸ்டான்லி தனது வழிபாட்டை முடித்துக் கொண்டு திரும்பினார். கொடி மரம் முன் வணங்கிவிட்டு, தனது காரில் புறப்பட்டு சென்றார். கனிமொழிக்காக ஏற்கனவே மொட்டை போட்டுள்ள வசந்தி ஸ்டான்லி, சிறையிலிருக்கும் கனிமொழி விரைவில் விடுதலையாகி வெளியில் வரவேண்டும் என்பதற்காக, வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எங்கிருக்கிறார் வழக்கறுத்தீஸ்வரர்?
காஞ்சிபுரம் காந்தி சாலையில் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில், சாலையிலிருந்து 6 அடி பள்ளத்தில் அமைந்துள்ளது. ஒரு காலத்தில் மறைந்த முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் இடையே வேதத்தில் கூறப்பட்ட கருத்துக்கள் குறித்து ஐயமும், கருத்து வேறுபாடும் எழுந்தன. இது தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாட்டை தீர்த்துக் கொள்ளவும், அவற்றின் உண்மைப் பொருளை அறியவும், காஞ்சிபுரத்தில் விசேஷமாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டதாக ஐதீகம். அவர்களுடைய வழிபாட்டில் மகிழ்ந்த இறைவன், அவர்கள் முன் தோன்றி, அவர்கள் பிரச்னையை தீர்த்து வைத்தார். இறைவனே நேரில் வந்து வழக்கை தீர்த்து வைத்ததால், இக்கோவிலில் உள்ள இறைவன், "வழக்கறுத்தீஸ்வரர்' என காலம் காலமாக அழைக்கப்படுகிறார்.
முனிவர்களுக்கும், தேவர்களுக்கும் ஏற்பட்ட பாலிட்டிக்ஸை செய்த வழக்கறுத்தீஸ்வரர், பாலிட்டிசியன்களுக்கும் வழி காட்டுவாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
வசந்தியின் பூஜைக்கு கட்சி பொறுப்பு கிடையாது-திமுக
வசந்தி ஸ்டான்லி நடத்திய பூஜை பெரும் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளதைத் தொடர்ந்து இதுதொடர்பாக திமுக விளக்கம் அளித்துள்ளது.
இதுகுறித்து திமுக ஒருங்கிணைப்பு செயலாளரும், எம்.பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், இது அவரது தனிப்பட்ட விருப்பம். இதற்கு கட்சி ஒருபோதும் பொறுப்பேற்காது. தனது பூஜை நிகழ்ச்சி குறித்து கட்சித் தலைமைக்கு வசந்தி ஸ்டான்லி தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications