தனக்குத் தானே பிரமாண்ட பாராட்டு விழா நடத்தும் எதியூரப்பா!
பெங்களூர்: நில மோசடி ஊழல் வழக்கில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ள
கர்நாடக முன்னாள் பாஜக முதல்வர் எதியூரப்பாவுக்கு வரும் 20ம் தேதி பிரமாண்டமான பாராட்டு விழா நடத்தப்படவுள்ளது.
24 நாட்கள் சிறையில் இருந்த அவர் நேற்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில், அவரது ஆதரவு அமைச்சர்களான ரேணுகாச்சார்யா (ஒரு நர்சுடன் தொடர்பு வைத்திருந்து அந்தப் படங்கள் வெளியாகி பரபரப்புக்குள்ளானவர்), சோமண்ணா, முருகேஷ் நிரானி (இவர் மீதும் நில மோசடி புகார் உள்ளது), சி.சி.பட்டீல் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் எதியூரப்பாவுக்கு பிரமாண்டமான முறையில் பாராட்டு விழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. எதற்காக இந்த பாராட்டு விழா என்று தெரியவில்லை.
பசவனகுடி நேஷனல் கல்லூரி மைதானத்தில் இந்த விழா நடக்கவுள்ளது. இதில் பாஜக தேசிய தலைவர்கள் சிலரை அழைத்து வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விழாவில் யார், யார் பங்கேற்கிறார்கள் என்பதை வைத்து எதியூரப்பாவுக்கு ஆதரவான மற்றும் எதிரான எம்எல்ஏக்கள், அமைச்சர்கள், தேசியத் தலைவர்கள் விவரம் வெளியில் தெரியவரும். இதற்காகத் தான் இந்த விழாவையே எதியூரப்பா நடத்துவதாகத் தெரிகிறது.
ஸ்ரீராமுலு பாஜகவிலிருந்து விலகல்:
இந் நிலையில் எதியூரப்பாவின் கைதைத் தொடர்ந்து முதல்வரான சதானந்த கெளடாவின் அமைச்சரவையில் இடம் தரப்பாடததால் கோபத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் ஸ்ரீராமுலு பாஜகவிலிருந்து ராஜினாமா செய்துள்ளார்.
கெளடாவை முதல்வராக்கிய எதியூரப்பா ஸ்ரீராமுலு உள்ளிட்ட பெல்லாரி ரெட்டிகளின் ஆதரவாளர்களுக்கு அமைச்சர் பதவி தர விடாமல் தடுத்துவிட்டார்.
இந் நிலையில் பெல்லாரி ஊரக சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஸ்ரீராமுலு பாஜகவின் சின்னத்தை ஏற்க மறுத்து, சுயேச்சையாகப் போட்டியிடுவதாக அறிவித்தார். இதையடுத்து அவருக்கு எதிராக வேட்பாளரை நிறுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.
பாஜகவில் நிலவும் சண்டையை ஊதிப் பெரிதாக்கும் வகையில், இந்தத் தொகுதியில் வேட்பாளர் யாரையும் நிறுத்துவதில்லை என்று முன்னாள் பிரதமர் தேவெ கெளடாவின் மதசார்பற்ற ஜனதா தளம் அறிவித்துள்ளது. இதன்மூலம் பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரிக்காமல், ஸ்ரீராமுலு தரப்பின் கரத்தை வலுப்படுத்த கெளடா திட்டமிட்டுள்ளார்.
ஸ்ரீராமுலுவுக்கு ஆதரவாக இரு பாஜக எம்பிக்களும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் மீதும் மேலும் 8 ரெட்டி ஆதரவு எம்எல்ஏக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாமல் பாஜக தலைமை திணறி வருகிறது. இவர்களை நீக்கினால், ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.