மோடிக்கு ட்விட்டரில் 4 லட்சம் 'ஃபாலோயர்கள்'!
பிற அரசியல்வாரிகளை விட நரேந்திர மோடியின் சாதனைகளுக்காகவே அவரை பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
மக்களிடையேயான தொடர்பை ஒருங்கிணைப்பதில் சமூக வலைத் தளங்கள் பெரும்பங்காற்றுகின்றன. ட்விட்டர் எனப்படும் சமூகவலைத்தளத்தின் மூலம் திரைப்படத்துறையினரும், அரசியல்வாதிகளும் அவர்களுடைய ரசிகர்கள் மற்றும் தொண்டர்களுடன் தொடர்பில் உள்ளன.
சசிதரூர் இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான பொதுமக்களுடன் தொடர்பில் இருக்கிறார். லலித்மோடி, ஓமர் அப்துல்லா, சுஷ்மாசுவராஜ் உள்ளிட்ட அரசியல் வாதிகளும் டுவிட்டரில் எதையாவது எழுதி சிக்கலில் சிக்கியதுண்டு.
பிற அரசியல்வாதிகளைப் போல அல்லாமல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி ட்விட்டரை சற்றே வித்யாசமாக பயன்படுத்துகிறார். தினந்தோறும் தனது ஆட்சியில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், புதிய சாதனைகள், மாநிலத்தில் வளர்ச்சிக்கு எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் அனைத்தையும் டுவிட்டரில் பதிவு செய்கிறார்.
எளிமையான ஆங்கிலத்தில் அனைவரும் புரிந்துகொள்ளும் விதத்தில் இருப்பதால் இந்தியா முழுவதும் அவரைத் தொடர்வோர் அதிகரித்துள்ளனர்.
சாதனை வெப்சைட்
அவரது வெப் சைட்டில் சாதனைகள் அனைத்தும் வெளியிடப்படுகின்றன. மேலும் தகவல் தொழில்நுட்பத்துறையின் சாதனைகளை பயன்படுத்தி மக்களுடன் நேரடி தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். இளைய தலைமுறையினரை கவரும் வகையில் நரேந்திரமோடி தனது வெப்சைட் மூலம் மாநிலத்தின் வளர்ச்சி குறித்து அப்டேட் செய்து வருகிறார்.
அவரது இ.மெயில் முகவரிக்கு நாள்தோறும் 500 மெயில்கள் வருகின்றனவாம். அவற்றை கவனித்து சரியான முறையில் உரிய பதிலளிக்கவும் ஏற்பாடு செய்துள்ளார்.
பேஸ்புக் சமூகவலைத் தளத்திலும் அனைவரையும் சென்றடையக்கூடிய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார் மோடி. மேலும் யு ட்யூப் மூலம் தனது அனைத்து பேச்சுகளும் மக்களை எளிதில் சென்றடையச் செய்துள்ளார் மோடி.
இவ்வாறு வெப்சைட் மற்றும், சமூக வலைத்தளங்களின் மூலம் அனைவருடன் தொடர்பில் உள்ளதற்காக இந்தியாவிலேயே குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடிக்கு 2010 ஆண்டிற்கான 'eGov 2.0' விருது வழங்கப்பட்டது.
மோடியின் சாதனைகளினால் ஈர்க்கப்பட்டுள்ள இளைஞர்கள் பலரும் ட்விட்டரில் அவரை தொடர்கின்றனர். இப்போது இவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சமாக உயர்ந்துள்ளது.
மோடியைத் தவிர எவரும் இந்த சாதனையை எட்டிப்பிடிக்கவில்லை. அந்த அளவிற்கு தகவல் தொழில் நுட்பத்துறையை ஆக்க சக்தியாக பயன்படுத்தி இளைஞர்களை கவர்ந்து வருகிறார் நரேந்திர மோடி.