தமிழக காங். தலைவராக நவ. 16ம் தேதி பதவியேற்கிறார் ஞானதேசிகன்
சென்னை : தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த ஞானதேசிகன் நவம்பர்16ம் தேதி பிற்பகலில் பதவியேற்றுக் கொள்கிறார்.
குலாம் நபி ஆசாத் கோஷ்டியைச் சேர்ந்த தங்கபாலு, சட்டசபைத் தேர்தல் முடிந்த கையோடு தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து கட்சி மேலிடத்திற்குக் கடிதமும் அனுப்பினார். ஆனால் அது ஏற்கப்பட்டதா, இல்லையா என்பது குறித்து எந்த தகவலையும் காணோம். இதனால் தங்கபாலுவே கட்சித் தலைவராக நீடித்து வந்தார், பலரைக் கட்சியை விட்டு நீக்கியும் களேபரப்படுத்தி வந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் புதிய தலைவராக ஜி.கே.வாசன் கோஷ்டியைச் சேர்ந்த பி.எஸ்.ஞானதேசிகனை புதிய தலைவராக கட்சி மேலிடம் அறிவித்தது. இதையடுத்து அனைத்துக் கோஷ்டித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து செயல்படுவேன் என்று ஞானதேசிகன் கூறினார். இவர் அதிமுகவுக்கு சாதகமானவர் என்பதால் வருகிற லோக்சபா தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி சேர வசதியாக ஞானதேசிகன் தலைவராக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து நிலவுகிறது.
தற்போது புதிய தலைவர் பதவியை, ஞானதேசிகன், நவம்பர் 16ம் தேதி பிற்பகல் 1.45 மணிக்கு ஏற்கவுள்ளார். அப்போது பழைய தலைவர் தங்கபாலு, புதிய தலைவர் ஞானதேசிகனிடம் தனது பொறுப்புகளையெல்லாம் ஒப்படைக்கவிருக்கிறார்.
இந்த பதவியேற்பு விழாவில் பல்வேறு கோஷ்டிகளின் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள் என பெரும் திரளானோர் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.