ரூ.1000 லஞ்சம் வாங்கிய கடையநல்லூர் நகராட்சி பில் கலெக்டர் கைது
நெல்லை மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள குமந்தாபுரத்தைச் சேர்ந்த சண்முகையா மகன் முத்துசாமி. அவர் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். அவரது குடும்ப சொத்தை அண்மையில் பங்கு வைக்கப்பட்டது. அதில் அவருக்கு 4.5 சென்ட் நிலம் கிடைத்தது.
அதற்கான பட்டாவில் பெயர் மாற்றம் செய்ய வேண்டி கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அந்த பணியை செய்ய வேண்டிய பில் கலெக்டர் முருகேசன் பெயர் மாற்றத்திற்கு ரூ.1000 லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் தர விரும்பாத முத்துசாமி, நெல்லை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
டி.எஸ்.பி. மனோகர் குமார் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கடையநல்லூர் சென்றனர். கடையநல்லூர் நகராட்சி அலுவலகத்தில் ஒழிந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் முருகேசன் முத்துசாமியிடம் இருந்து ரூ.1000 வாங்கும்போது அவரை கையும், களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
இதையடுத்து மேலக்கடையநல்லூரில் உள்ள முருகேசனின் வீட்டிலும் அவர்கள் சோதனை நடத்தினார்கள்.