சுப்பிரமணிய சாமிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்கு!
டெல்லி: 2ஜி வழக்கு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வழக்குத் தொடர்ந்துள்ளது.
அந்த மனுவில் மத்திய அரசு கூறியிருப்பதாவது: 2ஜி வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்து கடந்த மாதம் 10ம் தேதி தீர்ப்பை ஒத்தி வைத்தது. இதில் சாமியும் ஒரு மனுதாரராக சேர்க்கப்பட்டுள்ளார். தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், கடந்த 19ம் தேதி பெங்களூரில் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடும் மறைக்கப்பட்ட உண்மைகளும் என்ற தலைப்பில் நடந்த கூட்டத்தில் பேசிய சாமி, இந்த வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை தொடர்புப்படுத்தி பேசியுள்ளார்.
வழக்கில் தொடர்புடைய ஒரு நபர் இவ்வாறு பேசுவது நீதிமன்ற விசாரணை வரம்புக்குள் குறுக்கிடுவதாகும். இந்த விவரம் தெரிந்திருந்தும் வேண்டுமென்றே இவ்வாறு பேசியுள்ளார் சாமி. அவரது ஒரே நோக்கம் உயர் பதவியில் இருப்பவர்களின் பெயரைக் கெடுப்பது என்றே தெரிகிறது.
எனவே இது தொடர்பாக உரிய ஆணையை சாமிக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
மத்திய அரசின் சார்பில் வழக்கறிஞர் வாசிம் காத்ரி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
பெங்களூர் கூட்டத்தில், 2ஜி ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்கப்படும்வரை நான் ஓயமாட்டேன் என்று சுப்பிரமணிய சாமி பேசியதாகத் தெரிகிறது.