தொலைக்காட்சி நிருபரானார் கிளிண்டன் மகள் செல்சியா
முன்னாள் அதிபர் பில்கிளிண்டன், தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தம்பதியரின் மூத்த மகள் செல்சியா. 31 வயதாகும் இவர், கொலம்பிய பல்கலைக்கழகத்தில் ,சுகாதார படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். கிளிண்டனின் மகள் செல்சியா தனது நீண்டநாள் தோழரான மார்க் மெஷ்வின்ஸ்கி என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்தார்.
முதுகலை படிப்பை முடித்தவுடன் மெக்கின்சி அண்ட் கோ என்ற கல்சன்டிங் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். தற்போது ஆராய்ச்சி படிப்பை மேற்கொண்டுள்ள செல்சியா என்.பி.சி தொலைக்காட்சி நிறுவனத்தின் சிறப்பு செய்தியாளராக பணியில் சேர்ந்துள்ளார்.
சிறப்பு செய்திகள்
என்.பி.சி., தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான "மேக்கிங் ஏ டிபரன்ஸ்" என்ற நிகழ்ச்சிக்கான சிறப்பு செய்திகளை செல்சியா தருவார் என்று தொலைக்காட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. போற்றுதற்குரிய நற்செயல்களை செய்யும் தனிநபர்கள் பற்றியும் நிறுவனங்கள் பற்றியும் செல்சியா செய்திகள் வழங்குவார் என்றும் அவை "நைட்லி நியூஸ்" நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் எனவும் அந்நிறுவன தலைவர் ஸ்டீவ் கார்பஸ் தெரிவித்துள்ளார். இருப்பினும் செல்சியாவின் முதல் நியூஸ் கவரேஜ் எப்போது ஒளிபரப்படும் என்பது குறித்தோ, அது எதைப் பற்றி இருக்கும் என்பது குறித்தோ என்.பி.சி., நிர்வாகம் எதுவும் தெரிவிக்கவில்லை.
சிறப்பு செய்தியாளர் பணியில் இணைந்தாலும் தனது தந்தையின் தொண்டு நிறுவனப் பணிகளையும் அமெரிக்கன் பேலேட் பள்ளியின் நிர்வாகப் பணிகளையும் கவனித்து வருகிறார் செல்சியா என்பது குறிப்பிடத்தக்கது.