நாடாளுமன்றக் கூட்டத் தொடர்.. அமளி வேண்டாம்- சுஷ்மாவிடம் பிரணாப் வேண்டுகோள்
டெல்லி: வரவிருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை எந்த பிரச்சனையும் இல்லாமல் அமைதியாக நடத்த ஒத்துழைப்பு அளிக்குமாறு எதிர்கட்சித் தவைவர் சுஷ்மா ஸ்வராஜை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார்.
பாஜக தலைவரும், மக்களவை எதிர்கட்சித் தலைவருமான சுஷ்மா ஸ்வராஜ், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் அருண் ஜேட்லி ஆகியோரை மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தனது அலுவலகத்தில் வைத்து நேற்று சந்தித்து பேசினார்.
நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடர் விரைவில் துவங்கவிருக்கும் நிலையில் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. குளிர்கால கூட்டத் தொடரை அமைதியான முறையில் நடத்த முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்று பிரணாப் அவர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த சந்திப்பு குறித்து சுஷ்மா கூறியதாவது,
பிரணாப் முகர்ஜியை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினோம். ஒவ்வொரு கூட்டத் தொடர் துவங்கும் முன்பும் இது போன்ற சந்திப்புகள் நடப்பது வழக்கம். வரவிருக்கும் கூட்டத்தொடரில் எழுப்பவிருக்கும் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதித்தோம் என்றார்.