காந்தியை தேசத் தந்தை என்று அழைத்தததே கம்யூனிஸ்ட்கள் தான்: ஏ.பி. பரதன்
டெல்லி: காந்தியை நாங்கள் ஒருபோதும் எதிர்த்ததில்லை. அவரை தேசத்தந்தை என்று அழைத்ததே கம்யூனிஸ்டுகள்தான் என்று கூறியுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் தெரிவித்துள்ளார்.
தூர்தர்ஷனுக்கு ஏ.பி.பரதன் பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
காந்தி என்ற தனி நபரை நாங்கள் எதிர்க்கவில்லை. மகாத்மா காந்திககு தேசத் தந்தை என்ற பட்டம் கொடுத்ததே கம்யூனிஸ்டுகள் தான். கடிதம் மூலம் காந்தியை 'தேசத் தந்தை' என்று பி.சி. ஜோஷி தான் முதன்முதலில் குறிப்பிட்டார்.
காந்தியத்தை தான் எதிர்க்கிறோம். ஏனென்றால் நாங்கள் மார்க்சிஸத்தை நம்புகிறோம். மார்க்சிஸ்டுகளுடன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இணையலாம். ஆனால் அது உடனே நடக்காது.
இந்த இரு கட்சிகளும் தேசிய, சர்வதேச விவகாரங்களை ஒரேமாதிரியாகப் பார்ப்பதும், ஒருங்கிணைந்து செயல்படுவதும் மகிழ்ச்சி அளிக்கிறது. இடதுசாரி ஒற்றுமையும், கம்யூனிஸ்ட்கள் ஒற்றுமையும் வேறுவேறு விஷயங்கள்.
கம்யூனிஸ்ட்கள் அதிலும் குறிப்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பலவீனமடைந்து வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். பலவீனம் என்பது தற்காலிகமான ஒன்றே தவிர நிரந்தரம் அல்ல. சில நேரங்களில் தேர்தலில் தோல்வியை தழுவியிருக்கலாம். ஆனால் கட்சியின் அடிப்படை அமைப்பு, மக்களை ஒருங்கிணைத்துச் செல்லும் தன்மை ஆகியவை கட்சியின் பலங்களாகும்.
பாஜகவை பிற்போக்கு வகுப்புவாதக் கட்சியாகத் தான் கருதுகிறோம். ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் 5 ஆண்டு கால ஆட்சியின்போது வெளியில் இருந்தே ஆதரவு கொடுத்தோம். அமைச்சரவையில் பங்கேற்றிருக்கலாம் என்று கருத்து உண்டு. அந்த கருத்தை நாங்கள் அப்பொழுதே மறந்துவிட்டோம் என்றார்.
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பீகார் தலைநகர் பாட்னாவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடக்கிறது. அப்போது ஏ.பி. பரதன் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.