மோடிக்கு எதிரான மனுவை வாபஸ் பெற்ற மோடி எதிர்ப்பு போலீஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட்
டெல்லி: நரேந்திர மோடிக்கு எதிராக சமீபத்தில் போர்க்கொடி உயர்த்திய ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்ஜீவ் பட் உச்சநீதிமன்றத்தில் மோடி அரசுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றுள்ளார். குஜராத் மாநில அரசின் முடிவுகளில் தலையிட முடியாது என நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை அடுத்து அவர் தனது மனுவை வாபஸ் பெற்றார்.
1990 ஆம் ஆண்டு ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள ஜாம்ஜோத்பூர் காவல் நிலையத்தின் லாக் அப் பில் இருந்த 21 வயது விசாரணைக் கைதி மரணமடைந்தார். அப்போது சஞ்சீவ் பட் ஜாம் நகர் துணை காவல்துறை கண்காணிப்பாளராக பணி புரிந்து வந்தார். இந்த மரணத்தில் அவருக்கும் தொடர்பிருக்கலாம் என்று இறந்து போனவரின் உறவினர்கள் சந்தேகம் எழுப்பியதை அடுத்து அப்போது பணியில் இருந்த சஞ்சீவ் பட் பணி இடை நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தமக்கு எதிராக குஜராத் மாநில அரசு செயல்படுவதாக எண்ணிய சஞ்சீவ் பட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்த வழக்கு தொடர்பாக உயர்நீதிமன்றத்தை அணுகுமாறு தெரிவித்தனர். இதனையடுத்து சஞ்சீவ் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டார்.
குஜராத் கலவர வழக்கு
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு நடந்த கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தின் தொடர்ச்சியாக நடத்த கலவரத்தின் போது 2 ஆயிரம் இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த கலவர வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய தனக்கு கீழ் பணிபுரியும் போலீஸ் அதிகாரி கே.டி.பந்த் என்பவரை வற்புறுத்தியதாக சஞ்சீவ் பட் கைது செய்யப்பட்டு பின்னர் பணி இடை நீக்கமும் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.