முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் லேசான நிலநடுக்கம்- அணைக்கு ஆபத்தில்லை
தொடுபுழா: தமிழக- கேரள மாநிலங்களின் எல்லை பகுதியான குமுளியில் இன்று காலையில் 2 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனால் அப்பகுதியில் அமைந்துள்ள முல்லை பெரியார் அணைக்கு எந்த ஆபத்தும் இல்லை.
கேரள மாநிலத்தின் இடுக்கி மாவட்டம், தமிழக எல்லை பகுதியில் உள்ளது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியார், குமுளி, உப்புதரா, பசுபாரா, தோப்புரம்குடி, மூலமற்றம் ஆகிய இடங்களில் காலை 5.27 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு காலை 5.45 மணிக்கு அதேபகுதிகளில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தில் சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இந்த நிலநடுக்கத்தால் குமுளி பகுதியில் உள்ள முல்லை பெரியார் அணைக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 34 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கம் மூலம் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை. அதேபோல அணைக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.