தென் சீன கடலில் எண்ணெய் எடுக்கும் விவகாரம்: இந்திய, சீன பிரதமர்கள் பேச்சுவார்த்தை
தென் கிழக்கு நாடுகள் கூட்டமைப்பின் மாநாடு இந்தோனேசியாவில் உள்ள பாலியில் இன்று துவங்கியது. இதில் கலந்து கொள்வதற்காக பாலி சென்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங் தென் சீனக் கடல் விவகாரம் குறித்து சீன பிரதமர் வென் ஜியாபோவிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
தென் சீனக் கடல் பகுதியில் எண்ணெய் எடுக்கும் இந்தியாவின் முடிவு முற்றிலும் வர்த்தகம் சார்ந்தது என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். எண்ணெய் எடுப்பது தொடர்பாக இந்தியா, வியட்நாமுடன் ஒப்பந்தம் செய்திருப்பது சீனாவை கோபப்படுத்தியுள்ளது. தென் சீன கடல் பகுதியில் யாருக்கு உரிமை என்ற விவகாரம் தொடர்பாக சீனாவுக்கும், வியட்நாம் உள்ளிட்ட பல தென் கிழக்காசிய நாடுகளுக்கும் இடையே பிரச்சனை உள்ளது.
இந்த விவகாரத்தில் இந்தியாவும், சீனாவும் ஒருங்கிணைந்து தீர்வு காண முடிவு செய்துள்ளது.
21ம் நூற்றாண்டு ஆசியாவுடையதாக்க இந்தியாவும், சீனாவும் கைகோர்த்து செயல்பட வேண்டும் என்று சீன பிரதமர் வென் ஜியாபோ தெரிவித்துள்ளார்.
நாம் அண்டை நாட்டவர்கள், ஆசியா கண்டத்தில் வளர்ந்து வரும் நாடுகளில் மிகப் பெரிய பொருளாதரம் நம்முடையது.நாம் இருவரும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும். இந்தியாவும், சீனாவும் வளர இந்த உலகில் போதுமான இடம் உள்ளது என்று மன்மோகன் சிங் தெரிவித்தார்.
தென் சீன கடல் பகுதியில் உள்ள வளங்களைக் கண்டறிவது குறித்து இந்தியா, சீனா இடையே பனிப்போர் நடந்த மறு வாரம் இந்தச் சந்திப்பு நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.