கருணாநிதி வைத்து விட்டுப் போன கடன்தான் காரணம்- சேதுராமன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் மீதான மத்திய அரசின் பாரபட்சத்தை நீக்கி, அதை நிர்ப்பந்தித்து நமது உரிமைகளைப் பெற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்த பால் விலை உயர்வு, பஸ் கட்டண உயர்வு உள்ளிட்டவை குறித்து தா.பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறுகையில்,

தமிழக அரசின் மீது பாரபட்ச போக்கைக் கொண்டுள்ள, மத்திய அரசை நிர்பந்தித்து நம்முடைய உரிமைகளைப் பெறுவது மிகவும் அவசியம். மாற்று வழிகளை கண்டறிந்து இன்றைய நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு தமிழக அரசு முயற்சிக்க வேண்டும்.

இதற்கு பதிலாக மக்களின் மீது கட்டண உயர்வை உயர்த்துவது எந்தவிதத்திலும் நியாயமானது ஆகாது. எனவே, ஏற்றியிருக்கும் கட்டணத்தை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார் அவர்.

மாபெரும் அதிர்ச்சி-பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில்,

கட்டண உயர்வு, மாபெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்த ஆடு, மாடு வழங்கும் திட்டத்தைத் துரிதப்படுத்தியிருந்தால், பால் விலை உயர்வை தவிர்த்திருக்க முடியும்.

அதே போல், ஏழை, எளியோர் அதிகம் பயன்படுத்தும் பஸ் கட்டணத்தை உயர்த்தியிருப்பது, அதிர்ச்சி மேல் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் மேலும் மக்களை வாட்டி வதைக்கும் இத்தகைய கட்டண உயர்வுகளை தமிழக அரசு வாபஸ் பெற வேண்டும் என்றார்.

கருணாநிதி வைத்து விட்டுப் போன கடன்தான் காரணம்-'சேது'

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் தலைவர் டாக்டர் சேதுராமன் இதுகுறித்துக் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழகத்தை ஒரு லட்சம் கோடிக்கு மேல் கடனில் மூழ்கடித்துச் சென்றது கருணாநிதி அரசு. இதனால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியிலிருந்து மக்களை மீட்கவே தமிழக அரசு பஸ் கட்டணம், பால் கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

"கடன் நெருக்கடியில் மின் வாரியம், போக்குவரத்து துறை, ஆவின் பால் நிறுவனம் மூன்றும் மூழ்கி விடக்கூடாது. மூன்றுமே மக்களின் அத்தியாவசிய தேவைகள். இந்நிறுவனங்கள் திவாலாகி விட்டால் பாதிப்பு மக்களுக்குத் தான் என்பதை எல்லோரும் உணர வேண்டும். கடந்த அக்டோபர் 22 அன்று டெல்லியில் நடந்த தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்தில் மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசின் சர்வாதிகார போக்கை வெளிப்படையாக கண்டித்து தமிழக முதல்வர் தனது கருத்தை பதிவு செய்தார்.

தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்று ஆறு மாதங்களுக்கு மேலாகி விட்டது. இன்றைய தேதி வரை மத்திய அரசிடமிருந்து எந்த வித நிதியும் வந்து சேர வில்லை என்பதை முதல்வர் வெளிப்படையாக அறிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மக்களும் இந்நாட்டின் குடிமக்கள்தான் என்று மத்தியில் ஆளும் மன்மோகன்சிங் அரசு ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழகத்திற்கு நிதி நெருக்கடி காலத்தில் கூட மத்திய அரசு நிதி ஒதுக்காமல் புறக்கணிப்பதை கண்டித்து கூட்டணியில் மந்திரி பதவி வகிக்கிற தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்.பி.க்கள் உடனடியாக ராஜினாமா செய்து தங்களது கண்டனத்தை தெரிவிக்க முன் வர வேண்டும்.

மத்திய அரசிடமிருந்து எந்தவித நிதியும் வரவில்லை. இன்னொரு பக்கம் டீசல், பெட்ரோல் விலை உயர்வு என மாநில அரசு சுமையை அதிகரிப்பதே மத்தியில் ஆளுகிற காங்கிரஸ் அரசு தான். மாநில அரசை தனது அடிமை போல வைத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லியில் ஆளும் காங்கிரஸ் அரசு நினைக்கிறது. காங்கிரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்து தமிழர்கள் ஒன்று சேர்ந்து போராட வேண்டும்.

தமிழக முதல்வர் அறிவித்துள்ள பஸ் கட்டண உயர்வு, பால் கட்டண உயர்வு திவாலாகும் நிறுவனங்களை மீட்க கொடுக்கும் கசப்பு மாத்திரையாக எடுத்துக் கொள்ள வேண்டும். நிதி நிலை சீரான பின்பு நிச்சயம் விலையேற்றம் குறைய வாய்ப்புண்டு என்பதை மக்கள் உணர்ந்து தமிழகத்தை மீட்கும் இந்த கட்டண உயர்வினை பொறுத்துக் கொள்வார்கள் என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+