அதிமுக தேர்தல் அறிக்கையில் சொன்னதைச் செய்தாலே மின் பிரச்சினையை சமாளிக்கலாம்!
சட்டசபைத் தேர்தலுக்கு முன்பு அதிமுக சார்பில் வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கையில், மின் நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
"இருண்ட தமிழகம் ஒளிமயமாக்கப்படும். மின்சார வாரியம் திருத்தி அமைக்கப்பட்டு, மின் விநியோகம் சீராக்கப்பட்டு, மின் திருட்டு தடுக்கப்படும்.
வீடு, தொழில் மற்றும் விவசாயத்திற்கு தேவையான மின்சாரம் தடையின்றி வழங்க துரித நடவடிக்கை எடுக்கப்படும். அதிமுகம் ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் இதற்கான சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். விவசாயம், குடும்பம், தொழில்களுக்கான மின்சார விநியோகம் தனியாக பிரிக்கப்பட்டு, அதை நவீன தொழில்நுட்பத்தின் மூலம் விநியோக முறையில் மாற்றம் செய்து சீரமைப்போம். கம்ப்யூட்டர் முறையில் மின்சார மீட்டர் அளவு கணக்கிடப்படும். மேலும் அரசு துறைகளிலும், தனியார் துறைகளிலும் மின்சாரம் தவறாகப் பயன்படுத்துவது தடுக்கப்பட்டு மின்சாரம் சேமிக்கப்படும்.
அனைத்து கிராமங்களுக்கும், நகரங்களுக்கும் இன்னும் 4 ஆண்டுகளுக்குள் மும்முனை மின்சார இணைப்பு மின்சாரம் தடையில்லாமல் கிடைக்க வழிவகை செய்யப்படும்.
மின்சார திருட்டை ஒடுக்க முன்னாள் ராணுவத்தினரைக் கொண்டு மின்சார பாதுகாப்புப் படை அமைக்கப்படும்.
2012ஆம் ஆண்டுக்குள், அதாவது இரண்டு வருடங்களுக்குள் 151 நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில், நகராட்சிக் கழிவைக் கொண்டு 1000 ஆறு மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் தமிழக நகரங்கள் தூய கார்பன் நியூட்ரல் நகரங்களாக மாற்றப்பட வாய்ப்பு ஏற்படுத்தப்படும்.
2013ஆம் ஆண்டுக்குள் பத்து 300 ஆறு உருவாக்கப்பட்டு 3000 ஆறு மின்சாரம் அதன் மூலம் தயாரிக்கப்படும்.
காற்றாலை மின்சாரம் 30 சதவீதமாகவும் மற்றும் அணுசக்தி மின்சாரம் 25 சதவீதமாகவும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இயற்கை எரிவாயு மின்சாரம்:
தெரிந்தெடுக்கப்பட்ட 160 கிராமப் பஞ்சாயத்துக்களில் 200 கிலோ வாட் உயிரிதிரள் (Bio mass) இயற்கை எரிபொருள் மின்சாரம் உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் கிராமப் புறங்களில் 64000 பேருக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்க ஏற்பாடு செய்யப்படும்.
வீடுகள் மற்றும் தெருக்களுக்கு சூரிய ஒளி இலவச மின்சாரம்:
வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களின் வீடுகளுக்கு சூரிய ஒளி மூலம் தடையில்லா மின்சார வசதி இலவசமாக வழங்கப்படும்.
கிராமப்புற தெரு விளக்குகள் சூரிய ஒளி மின்சாரத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேற்கண்ட சிறப்புத் திட்டங்கள் மூலம் தமிழ் நாட்டை பன்முக சமூக, பொருளாதார வளம் பெற்ற மாநிலமாக மாற்றி, 1,20,000/- கோடி ரூபாய் கூடுதல் வருமானத்தை 5 வருடங்களில் ஈட்ட நடவடிக்கை மேற்கொள்வோம்.
சமூக, பொருளாதார ஏற்றத்தாழ்வு இல்லாத, அமைதியான, பாதுகாப்பான, ஒட்டு மொத்த வளர்ச்சி அடைந்த சமத்துவ தமிழகத்தை அமைப்போம். இந்தப் பிரத்தியேக திட்டங்களின் மூலம் தமிழ் நாட்டை ஒரு லட்சம் கோடி ரூபாய் கடனாளி மாநிலம் என்கிற தலைகுனிவில் இருந்து மீட்டு, ஒவ்வொரு தமிழரும் தலை நிமிர்ந்து நிற்கவும், தன்மானத்துடன் வாழவும், தமிழ் நாடு ஒருங்கிணைந்த தன்னிறைவு கொண்ட, தொடர்ச்சியான நீடித்த வளர்ச்சி பெற்ற மாநிலமாக்க வழிவகை செய்யப்படும். அதற்கான தொடர் ஊக்க முயற்சிகளுக்கு பெரிதும் உதவுகிற வகையில் பல புதிய திட்டங்கள் தீட்டப்படும்.
மின்சார திருட்டை ஒழிக்க ஒரு படை அமைத்து, வினியோக முறையில் மாற்றம் செய்து, 3 பேஸ் கரண்ட் தடையில்லாமல் வழங்கப்ப்டும்"
இதுதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மின் நிர்வாகம் குறித்த முக்கிய அம்சம். இதில் உள்ள சாராம்சம் என்னவென்றால் தமிழகத்தின் மின் பற்றாக்குறை மற்றும் தேவையை சமாளிக்க அதிமுக அரசு, கழிவுகளிலிருந்து மின்சாரம் எடுப்பது, சூரிய சக்தி மின்சார பயன்பாட்டை அதிகரிப்பது, இயற்கை எரிவாயுவை அதிக அளவி்ல் பயன்படுத்துவது போன்றவற்றுக்கு முக்கியத்துவம் தரும் என்பதுதான்.
இந்த மரபு சாரா மின் உற்பத்திக்கு தமிழக அரசு முழு வேகத்துடன் முக்கியத்துவம் கொடுத்து செயல்பட்டால், தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றியது போலும் ஆகும், இந்தியாவிலேயே மரபு சாரா மின் உற்பத்தியை பெருமளவில் செய்யும் முதல் மாநிலம் என்ற பெருமையும் தமிழகத்திற்கு கிடைக்கும். மேலும் தமிழகத்தின் மின்தேவை வெகுவாக குறைந்து, ஜெயலலிதா கனவு காண்பது போல தமிழகம் மின் மிகை மாநிலமாகவும் உருவெடுக்கும்.
நினைத்ததை முடிப்பவர் என்ற பெயரைப் பெற்ற முதல்வர் ஜெயலலிதா, இந்தத் திட்டங்களுக்கு முழு வடிவம் கொடுத்து, முன்னுரிமை தந்து செயல்படுத்த விரைவார் என்று நம்புவோம்.