சில்லறை வணிகத்தில் அன்னிய முதலீடு- மத்திய அரசு திட்டம்: இந்தியாவுக்குள் நுழையுமா வால்- மார்ட்?
இதன்மூலம் வால்மார்ட், கேர்போர், டெஸ்கோ போன்ற மாபெரும் நிறுவனங்கள் இந்தியாவில் சூப்பர் மார்க்கெட்களை நேரடியாகவே தொடங்க முடியும். இப்போதுள்ள விதிகளின்படி இந்திய நிறுவனத்துடன் இணைந்து தான் இவர்கள் இந்தியாவில் ஸ்டோர்களைத் தொடங்க முடியும் என்ற நிலை உள்ளது. மேலும் இந்த ஸ்டோர்களில் அன்னிய முதலீடு 49 சதவீதத்தைத் தாண்டக் கூடாது என்ற விதியும் உள்ளது.
ஆனால், சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் நேரடியாகவே நுழைந்தால் தான் விலைவாசி குறையும் என மத்திய அரசு கருதுகிறது. பெரும் பணத்துடன் நுழையும் இந்த நிறுவனங்கள் சில்லறை வணிகர்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும்போது, விலைகள் சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், ஆரம்பத்தில் விலையைக் குறைத்து விற்று உள்நாட்டு சில்லறை வர்த்தகர்களின் 'கதையை' முடித்துவிட்டு, பின்னர் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் விலையை முடிந்த அளவுக்கு உயர்த்திவிடும் அபாயமும் உள்ளது.
சில்லறை வணிகத்தில் வெளிநாட்டு நிறுவனங்களை அனுமதிக்கவே கூடாது என்று நாடு முழுவதுமே வணிகர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.
நமது நாட்டில் சில்லறை வணிகத்தில் கிட்டத்தட்ட ஆண்டுதோறும் 450 பில்லியன் டாலர்கள் அளவுக்கு பணம் புழங்குவது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த சந்தைக்குள் நேரடியாக நுழைய வால்மார்ட் உள்ளிட்ட சர்வதேச சூப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் நீண்ட காலமாகவே முயற்சி செய்து வருகின்றன.
ஆனால், இதனால் லட்சக்கணக்கான சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவர் என்பதால், இந்தத் திட்டத்தை இடதுசாரிகள் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் எதிர்த்து வருகின்றன.
இந் நிலையில், விலைவாசியைக் கட்டுக்குள் கொண்டு வர பல வகையான திட்டங்களை 'ரூம் போட்டு' யோசித்து வரும் மத்திய அரசு, இப்போது சூப்பர் மார்க்கெட்களில் மல்டி பிராண்ட் நிறுவனங்களை இறக்கிவிடுவது குறித்து ஆராய ஆரம்பித்துள்ளது.
ஆனால், இதற்கு காங்கிரஸ் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான மம்தா பானர்ஜியின் திரிணமூல் காங்கிரஸ் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.