அருண்ஜேட்லி பெயரில் போலி டுவிட்டர் அக்கௌண்ட்: போலீசில் புகார்
டெல்லி: ராஜ்யசபா எதிர்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் பெயரில் போலியாக டுவிட்டரில் மெசேஜ் அனுப்பிய நபரை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர்.
ராஜ்யசபா எதிர்கட்சி தலைவரும், பாஜக மூத்த தலைவருமான அருண் ஜேட்லியின் பெயரில் யாரோ போலியாக டுவிட்டரில் அக்கௌண்ட் வைத்து ஏராளமானோருக்கு அவர் பெயரிலேயே மெசேஜ் அனுப்பியுள்ளார். இதைப் பார்த்த அருண் ஜேட்லி கடுப்பாகி டெல்லி போலீசில் புகார் செய்தார். அந்த போலி நபர் அனுப்பிய மெசேஜ்களை பிரிண்ட் அவுட் எடுத்து போலீசிடம் கொடுத்தார்.
அவரது புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இதற்கிடையே அந்த போலி டுவிட்டர் அக்கௌண்ட் நீக்கப்பட்டது.
அரசியல் தலைவர்கள் பெயரில் போலி அக்கௌண்ட் திறந்து கண்டபடி மெசேஜ் அனுப்புவது அதிகரித்து வருகிறது. அண்மையில் தான் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தியின் பெயரில் போலியாக பேஸ்புக் அக்கௌண்ட் திறந்து அதன் மூலம் மத்திய பிரதேச காங்கிரஸ் பெண் நிர்வாகிகளிடம் கடலை போட்ட கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.