சீனாவில் புதிய விவாகரத்து சட்டம், மனைவிகள் பாதிப்பு!
பொருளாதார வளர்ச்சி அதிகரிக்க அதிகரிக்க சீனாவில் குடும்ப வாழ்க்கையிலும் சிக்கல் அதிகரித்து வருகிறது. விவாகரத்து என்றாலே மோசமாக உணரப்பட்ட சீன நாட்டில் தற்போது விவாகரத்து வழக்குகள் அதிகமாகி வருகின்றன.
பீஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் கடந்த ஐந்தாண்டுகளில், விவாகரத்து 7 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டின் கடந்த 9 மாதங்களில் மட்டும், 28 லட்சம் தம்பதியர் விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளனர்.
மொத்தத்தில் நாட்டில் விவாகரத்து பெறுவோரின் எண்ணிக்கை, தற்போது 17.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. சராசரியாக ஒருநாளைக்கு 10 ஆயிரம் விவாகரத்துகள் நடைபெறுவதாக சீன பொது விவகார அமைச்சகத்தின் புள்ளி விபரக்கணக்கு தெரிவித்துள்ளது.
புதிய சட்டத் திருத்தத்தினால் சிக்கல்
இந்த நிலையில் சீனா உச்சநீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 13ம் தேதி விவாகரத்து சட்டத்தில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி விவாகரத்து பெற்றபின்னர் அவர்கள் வசித்த வீட்டை இரண்டாக பிரிக்க முடியாது. யார் பெயரில் அந்த வீடு உள்ளதோ அவர்களுக்கு மட்டுமே சொந்தமாகும்.கணவன் சொந்தமாக வீடு வாங்கியிருந்தால் மனைவி அந்த வீட்டுக்கு சொந்தம் கொண்டாட முடியாது, வீட்டை விட்டு வெளியேறி விட வேண்டும்.
பெண்கள் எதிர்ப்பு
இந்த புதிய சட்ட திருத்தம் ஆண்களுக்கு சாதகமாகவே உள்ளது. சொந்த வீடுகள்ள கணவனிடம் இருந்து வலுக்கட்டாயமாக, மனைவி வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். சீனாவில் நீதித்துறையில் 13 ஆண் நீதிபதிகளுக்கு ஒரு பெண் நீதிபதி என்ற அளவில்தான், பெண் உரிமை உள்ளது. அதேபோல்தான், குடும்ப விவகாரங்களிலும் பெண் உரிமை என்பது, வெறும் ஏட்டளவில் உள்ளது என்று குமுறுகின்றனர் சீனப் பெண்கள்.