நடப்பு ஆண்டில் 4 மாவட்டங்களில் ரூ.153.5 கோடி கலால் வரி வசூல்
நெல்லை: நெல்லை உள்பட 4 மாவட்டங்களில் நடப்பு ஆண்டில் ரூ.153.50 கோடி வசூலிக்கப்பட்டுள்ளதாக நெல்லை கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
இது தொடர்பாக நெல்லையில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது,
நெல்லை கலால் மற்றும் சேவை வரித்துறை ஆணையரகத்தின் கீழ் நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர் மாவட்டங்கள் உள்ளன. இந்த ஆணையகரகத்தின் கீழ் கலால் வரி செலுத்துபவர்கள் 967 பேரும், சேவை வரி செலுத்துபவர்கள் 11,732 பேரும் உள்ளனர். நடப்பு ஆண்டில் ரூ.395 கோடி கலால் மற்றும் சேவை வரி வசூலிக்க மத்திய நிதி அமைச்சகம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில் கலால் வரி ரூ.215 கோடியும், சேவை வரி ரூ.180 கோடியும் அடங்கும்.
கடந்த மாதம் வரை கலால் வரியாக ரூ.153.50 கோடியும், சேவை வரியாக ரூ.69.22 கோடியும் மொத்தம் ரூ.222.72 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் கலால் வரியாக ரூ.51.70 கோடியும், சேவை வரியாக ரூ.69 கோடியும் வசூலிக்கப்பட்டது. நெல்லையை பொறுத்தவரை சிமெண்ட், பீடி, பட்டாசு நிறுவனங்கள் அதிக கலால் வரியும், தூத்துக்குடி துறைமுகம் மூலம் அதிக சேவை வரியும் கிடைக்கிறது என்றார்.