கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்ததும் எனது ஜாமீன் குறித்து முடிவு- ராசா தகவல்
டெல்லி: கனிமொழியின் ஜாமீன் மனுமீதான முடிவுக்காக காத்திருப்பதாகும், அந்த முடிவு வந்ததும் தான் ஜாமீன் மனுதாக்கல் செய்வது குறித்து முடிவெடுக்கப் போவதாகவும் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தெரிவித்துள்ளார்.
டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற வளாகத்திற்கு நேற்று அவர் விசாரணைக்காக அழைத்து வரப்பட்டார். அப்போது அங்கு கூடிய செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
நான் நிரபராதி என்பதை நிரூபிக்க வழக்கு நடைமுறைகளையும், ஆவணங்களையும் உன்னிப்பாக ஆராய்ந்து வருகிறேன். 2ஜி அலைக்கற்றை வழக்கின் குற்றப் பத்திரிகை, அது தொடர்பான ஆவணங்கள், சாட்சிகளின் வாக்குமூலங்கள் ஆகியவற்றை ஆராய்ந்து படித்து வருகிறேன். நானே ஒரு வழக்கறிஞர் என்பதால் வழக்கு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பதை அறிந்து கொள்ள முடிகிறது.
நவம்பர் 11 முதல் சாட்சிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. அவர்கள் மத்திய அரசின் கொள்கை முடிவு குறித்து சாட்சி அளிக்கவில்லை. எனவே, அவர்களை குறுக்கு விசாரணை செய்ய விரும்பவில்லை.
இப்போதைக்கு ஸ்வான் டெலிகாம், ரிலையன்ஸ் டெலிகாம் அதிகாரிகள் வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். அவர்களின் வாக்குமூலத்துக்கும், எனக்கும் தொடர்பில்லை. அரசின் தொலைத்தொடர்பு கொள்கை குறித்து சாட்சிகள் வாக்குமூலம் அளிக்கும்போதுதான் குறுக்கு விசாரணையில் ஈடுபடுவேன் என்றார்.
நீங்கள் எப்போது ஜாமீன்கோரி மனு செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது கனிமொழியின் ஜாமீன் மனு மீதான முடிவு தெரியட்டும்.அதன் பிறகு எனது முடிவை நான் தீர்மானிப்பேன் என்றார் ராசா.