திருச்செந்தூர் அருகே கடல் சீற்றம்: பல லட்சம் மதிப்புள்ள படகு- வலைகள் சேதம்
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே கடல் சீற்றத்தால் பல லட்சம் மதிப்புள்ள படகுகள், வலைகள் சேதமைடந்தன.
திருச்செந்தூர் பகுதியில் நேற்று மதியத்துக்கு பிறகு மழை பெய்யத் தொடங்கியது. இதையொட்டி ஆலந்தலையில் கடல் சீற்றம் ஏற்பட்டதால் நேற்று மாலையில் ஊரில் தண்டோர போட்டு அறிவித்தனர். இதை தொடர்ந்து கடலில் நூற்றுக்கும் மேற்பட்ட பைபர் படகுகளில் மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் அவசரம் அவசரமாக கரை திரும்பினர். மேலும் முன்னெச்சரிகையாக அவர்கள் படகுகளை கரையில் இருந்து வெளியேற்றி கடற்கரை ஓரத்தில் கொண்டு வந்து நிறுத்தினர்.
இந்நிலையில் இன்று அதிகாலை 1 மணிக்கு கடல் சீற்றம் அதிகமானதால் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 100 படகுகள் கடலுக்குள் அடித்து செல்லப்பட்டன. இதில் 10க்கும் மேற்பட்ட படகுகள் சேதமடைந்தன. கடலில் மீனவர்கள் விரித்திருந்த வலைகளும் சேதமடைந்தன. இதன் மதிப்பு பல லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இது குறித்து ஊர் தலைவர் அந்தோணி கூறுகையில், ஆலந்தலை தாழ்வான பகுதியில் உள்ளதால் அடிக்கடி கடல் சீற்றம் ஏற்படுகிறது. இங்கு தூண்டில் பாலம்அமைத்தால் இது போன்ற பாதிப்பு வராது. கடல் சீற்றம் காரணமாக கடற்கரை பகுதியில் உள்ள வீடுகளில் கடல் நீர் புகும் நிலையில் உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே, அரசு காலம் தாழ்த்தாது உடனடியாக இங்கு தூண்டில் பாலம் அமைக்க வேண்டும். மேலும் தற்போது சேதமடைந்த மீன் பிடி படகுகளுக்கும் அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.
நெல்லையிலும் கடல்சீற்றம்- பைபர் படகுகள் இழுத்துச் செல்லப்பட்டன:
நெல்லை கடற்கரையோர கிராமங்களில் புயல்காற்று வீசி வருகிறது. கடல் சீற்றத்தால் பைபர் படகுகள் கடலுக்குள் அடித்துச் செல்லப்பட்டன. பல லட்சம் மதிப்புள்ள படகு என்ஜின்கள் சேதம் அடைந்தன.
நெல்லை மாவட்டத்தில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. குமரி கடலில் ஏற்பட்ட புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடற்கரையோர கிராமங்களில் பலத்த காற்றுடன் மழை வெளுத்து கட்டுகிறது. கூட்டபுளி, பெருமணல், இடிந்தகரை, உவரி, ஜார்ஜியா நகர், மிக்கெல் நகர் உள்ளிட்ட 10 மீனவ கிராமங்களில் இன்று அதிகாலை முதல் புயல் காற்று வீசி வருகிறது. கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது.
மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்தி வைத்திருந்த பைபர் படகுகளை ஆக்ரோசமாக எழும்பிய கடல் அலைகள் கடலுக்குள் இழுத்துச் சென்றன. அவை கடலுக்குள் ஒன்றொடு ஒன்று மோதி பலத்த சேதம் அடைந்தன. மீனவர்கள் அதிகாலை 3 மணி முதல் படகுகளை கரைக்கு இழுத்து வரும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். படகுகளின் பின்புறம் பொருத்தப்பட்டுள்ள பல என்ஜின்கள் கடலில் மூழ்கி மாயமாகி உள்ளதாகவும், சேதம் பல லட்சம் இருக்கும் எனவும் மீனவர்கள் தெரிவித்தனர். கூட்டப்புளி கடற்கரையோர கிராமங்களில் வீடுகளில் கடல் நீர் புகுந்துள்ளது.
உவரி உள்ளிட்ட சில கிராமங்களில் இருந்து பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மக்கள் வெளியேற்றப்பட்டு வேறு இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடல் சீற்றம் காரணமாக 10 மீனவ கிராமங்களில் 1500 நாட்டு படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.