மகாராஷ்டிராவில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீவிபத்து: 15 பேர் பலி
நாக்பூர்: மகாராஷ்டிராவில் 2 பஸ்கள் நேருக்கு நேர் மோதி தீப்பிடித்து கொண்டதில், 15 பேர் உடல் கருகி பலியாகினர். 57 பேர் படுகாயமடைந்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர்- அவுரங்கபாத் நெடுஞ்சாலையில் இன்று அதிகாலையில் 2 பஸ்கள் நேருக்கு நேராக மோதிக் கொண்டன. இந்த விபத்தில் 2 பஸ்களும் ஒன்றையொன்று சொருகிக் கொண்டால் பயணிகள் பஸ்களை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.
சிறிது நேரத்தில் பஸ்கள் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தன. இதனால் இடிபாடுகளில் சிக்கிய பயணிகள் பலர் தீக்காயம் அடைந்தனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் 15 பேர் உடல் கருகி பலியாகினர். மேலும் 57 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் 37 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிய வந்தது. விபத்தில் காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.